'ஜனநாயகத்தின் புதிய குரல்' வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள்!
``மாற்றம் வரும் என நம்புகிறோம்" - நடிகர் ஆதி பேட்டி
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை முதலே திரையுலக நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் இன்று சென்னை எக்மோர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இணைந்தபடி வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ``அதிக அளவிலான வாக்குப்பதிவு என்பது ஒரு மிகச்சிறந்த விஷயம். மக்கள் அனைவரும் திரண்டு வந்து வாக்களிப்பதுதான் ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழக மக்களுக்கும் புதிய வாக்காளர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது இதுதான். மக்கள் தங்கள் எதிர்காலத்திற்காகவும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் வாக்களிக்க வேண்டும். நேர்மையாக இருப்பதுதான் இதில் மிக முக்கியமான விஷயம். இதுவரை வாக்களிக்காதவர்கள் தயவுசெய்து உங்கள் வாக்கைச் செலுத்துங்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இதுதான் மிக முக்கியமான கடமை. மாற்றம் வரும் என நம்புகிறோம். நல்லதே நடக்கும்.
வாக்களிப்பது உரிமை, அவர்களின் அதிகாரம். தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களிடம் தான் இருக்கிறது. வாக்களிக்க வராமல் இருந்துவிட்டு, பின்னர் குறைகூற நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த ஒரு நாள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது, எனவே உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள். நாம் அனைவரும் 4-ம் தேதிக்காக காத்திருப்போம். வாக்களிக்கச் சென்றவகள் பாதியிலேயே சிக்கியிருப்பதாகவும் அறிந்தேன். அனைவரும் பாதுகாப்பாகச் சென்று பாதுகாப்பாக தங்கள் இடங்களுக்குத் திரும்புவீர்கள் என நம்புகிறேன்." என்றார்.











