'கரூரில எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கு, அதை முடிக்காம விட மாட்டோம்'- ஆதவ் ...
`மிகவும் குண்டாக இருக்கிறாய்; உன்னால் குழந்தை பெற முடியாது!'- மனைவியை சித்ரவதை செய்து கொன்ற கணவன்
கர்நாடகா மாநிலம், தார்வாடு மாவட்டத்தில் உள்ள ஹனாசி என்ற கிராமத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர் பிரியங்கா என்ற செவிலியரை கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்தார். மல்யுத்த வீரரான பசவராஜ் திருமணமான சில மாதங்களில் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்த ஆரம்பித்தார். அவர் தனது மனைவியிடம் பெற்றோர் வீட்டில் சென்று தங்கம் மற்றும் பணம் வாங்கி வரும்படி கூறி அடித்து சித்ரவதை செய்து வந்தார்.
பசவராஜ் மட்டுமல்லாது அவரது குடும்பத்தை சேர்ந்த ரேவண்ணா, சுபாஷ் மற்றும் சித்தரமேஷ் ஆகியோரும் பிரியங்காவை அவரது பெற்றோர் வீட்டிலிருந்து பணம் மற்றும் தங்கம் கொண்டு வருமாறு பலமுறை வற்புறுத்தி நெருக்கடி கொடுத்தனர். அதோடு பிரியங்காவின் தோற்றம் மற்றும் உடல் பருமனை காரணம் காட்டி தொடர்ந்து அவரை அவமானப்படுத்தி வந்தனர்.

பசவராஜ் தனது மனைவி மிகவும் குண்டாக இருப்பதாகவும், தனக்கு அவர் பிடிக்கவில்லை என்றும் கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்றும் இதே போன்று அவர்களுக்குள் பிரச்னை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பிரியங்காவை பசவராஜ் கடுமையாக அடித்து உதைத்துள்ளார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் கழுத்தை நெரித்து பிரியங்காவை கொலை செய்துள்ளார். இது குறித்து இரண்டு நாட்கள் கழித்துதான் பிரியங்காவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இது குறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
அவர்கள் தங்களது புகாரில், பிரியங்காவை அவரது கணவர் மிகவும் குண்டாக இருப்பதாக அடிக்கடி கேலி செய்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அவர் ஏன் கர்ப்பமாகவில்லை என்று கேள்வி எழுப்பி துன்புறுத்தியுள்ளார். அதோடு குடும்பத்தினரிடம் பணம் மற்றும் நகைகளை மீண்டும் மீண்டும் வாங்கி வரும்படி கூறி நிர்ப்பந்தம் செய்துள்ளனர்.
பிரியங்கா மிகவும் குண்டாக இருப்பதால் அவரால் ஒருபோதும் குழந்தை பெற முடியாது என்றும் கூறி, பசவராஜ் தனக்கு பிரியங்காவை பிடிக்கவில்லை என்று சித்ரவதை செய்து கொலை செய்துவிட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு முறை கர்ப்பம்
ஆனால் உண்மையில் பிரியங்கா இரண்டு முறை கர்ப்பமானார் என்று பிரியங்காவின் மாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ''திருமணத்திற்குப் பிறகு இரண்டு முறை கருத்தரித்ததார். ஆனால் அவரது கணவர் மீண்டும் மீண்டும் உடல் ரீதியாகத் தாக்கியதால் கருச்சிதைவு ஏற்பட்டது. எனக்கு அவளைப் பிடிக்கவில்லை, அவள் குண்டாக இருக்கிறாள், குழந்தைகளைப் பெற முடியாது" என்று பசவராஜ் சொல்லிக்கொண்டே இருந்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்'' என்று கோரினார்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பசவராஜ் வத்தர், ரேணவ்வா, சுபாஷ், சித்தரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





















