இது எங்க குடும்பத்தின் சீரிஸ்?! - Brothers & Sisters Team Fun Interview | Jio Ho...
"முதல்வர் விஜய்க்கு திரைத்துறையினர் அழுத்தம் கொடுக்கக் கூடாது" - இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்
வட மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாக வைத்து புதுமுக இயக்குநர் சங்கிலி இயக்கத்தில் அசோக் குமார், யாழினி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வட மஞ்சுவிரட்டு’.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.பி. உதயகுமார், "முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்காக திரைப்படம் வெளியாகி முதல் ஏழு நாட்களுக்கு ஐந்து காட்சிகளும், சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 5 காட்சிகளும் திரையரங்கில் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது, நிச்சயமாக வரவேற்கத்தக்கது.
தமிழ் திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டிய அபாயகரமான சூழலில் இருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா திரைத்துறைகள் மேம்பட்டு இருக்கின்றன. அங்குள்ள நடிகர்கள் முதலில் கதையைத் தேர்வு செய்வார்கள், பிறகு அதற்குண்டான பட்ஜெட்டைக் கேட்பார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகாக வரக் கூடிய லாபத்தில் ஒரு பங்கினை எடுத்துக் கொள்வார்கள். நம்முடைய நடிகர்கள் அப்படி இருப்பதில்லை.
ஏனெனில் திரைப்படம் எடுக்கின்ற எனக்கும், பேரரசுக்கும் திரைப்படம் இயக்குவதற்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. எழுத்தாளர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், ஒப்பனை கலைஞர்கள் தங்களுடைய கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன் வைப்பார்கள்.
திரைத்துறையினர் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து, முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. அதனால்தான் இயக்குநர் சங்கத்தில் இருந்து நாங்கள் அவரைச் சந்திக்கும் போது எந்தவிதமான கோரிக்கையும் முன் வைக்கவில்லை.

அவருக்கு எது நல்லது, கெட்டது என்பது தெரியும். அவரே நிச்சயம் செய்வார் என நாங்கள் நம்புகிறோம். திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், திரையரங்குகளில் டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும்.
மும்பை போன்ற பெரிய நகரங்களில் கூட 70, 80 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுகிறது. இந்த நிலை தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளுக்கும் வர வேண்டும் என்பது எனது விருப்பம்” என்று பேசியிருக்கிறார்.



















