மேகதாது அணை: ``இதை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்" - விசிக தலைவர் திருமாவளவன் வ...
மேகதாது: `தமிழர்களுக்கு எந்த வகையிலும் துரோகம் இழைக்கக் கூடாது என்பதில்...' - அமைச்சர் பி.விஸ்வநாதன்
தமிழ்நாட்டின் புதிய உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் பி.விஸ்வநாதன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேகதாது அணை விவகாரம், ஆளுநர் உடனான உறவு மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்படுவது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். தமிழக மக்களுக்கு எந்த வகையிலும் துரோகம் இழைக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் நானும், முதலமைச்சர் அவர்களும் இதில் ஒரே நேர்க்கோட்டில்தான் தெளிவாக இருக்கிறோம்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆளுநருக்கும் உயர்கல்வித்துறைக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளால் பட்டமளிப்பு விழாக்கள் தாமதமானது. மற்ற அமைச்சர்களைப் போல ஆளுநரை எதிர்கொள்ளும் துணிவும் ஆற்றலும் எனக்கும் இருக்கிறது. ஆனால், 'எதிர்கொள்ளுவேன்' என்பதை விட, ஆளுநருடன் மிகச் சரியான முறையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். கல்வித்துறை வல்லுநர்களுடனும், முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படியும் செயல்பட்டு, தமிழக மக்களுக்குத் தேவையான வெற்றிகளைப் பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபடுவோம். `ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்' என்பதை அறிந்தவன் நான்.
அமைச்சர், ஆளுநருடன் ஒரு நேர்த்தியான மற்றும் இணக்கமான உறவை ஏற்படுத்தி, கல்வித்துறைக்கும் மக்களுக்கும் தேவையான நன்மைகளை அரசு முறைப்படி பெற்றுத் தரும். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகத் தெளிவாக இருக்கிறார். அதுவே எங்களது கூட்டு நிலைப்பாடு. மேலும், இந்த விவகாரத்தில் புதிய அரசுக்குச் சற்றே கால அவகாசம் தேவைப்படுகிறது. அதுவரை பொறுத்திருக்கலாம்.
காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதிப் பற்றாக்குறை மற்றும் பேராசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசித்து வருகிறோம். இப்போதுதான் அமைச்சராகப் பொறுப்பேற்று மதுரைக்கு வந்திருக்கிறேன். விரைவில் நேரில் சென்று ஆய்வு நடத்துவேன். ஜனநாயகத்தின் மூன்றாவது கண்ணாக விளங்கும் பத்திரிகையாளர்களின் ஆதரவோடு, கல்வித்துறையில் எங்கு எங்கு சீர்திருத்தங்கள் தேவையோ, அங்கெல்லாம் நிச்சயம் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்." என்றார்.












