பிரிந்தவர்கள் இணைவார்களா? மம்தா, சரத் பவார் கட்சிகளை இணைக்கும் பேச்சு - அகண்ட கா...
`மேட்டூர் அணையை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை!' - சிறப்புத் தொகுப்பு அறிவித்த முதல்வர் விஜய்
காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் “குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026” செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நெல் சாகுபடி என்பது மாநிலத்தின் உணவுப் பாதுகாப்புக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் முக்கிய பங்காற்றி வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 52.72 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 20.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. குறுவைப் பருவத்தில் மட்டும் சுமார் 5.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தாமதம் மற்றும் மேட்டூர் அணைக்கு குறைந்த நீர்வரத்து காரணமாக ஜூன் 12-ஆம் தேதி அணையை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.56 அடியாகவும், நீர் இருப்பு 41.52 டிஎம்சியாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக சாகுபடி செய்யப்படும் 5 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது. எனினும், வடிமுனைக் குழாய்க் கிணறுகள் (Filter Points) மூலம் சுமார் 3.55 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ள முடியும் என்பதால், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்கள் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ரூ.57.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இயந்திர நெல் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் மானியம் மற்றும் புதிய நெல் ரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், வேளாண் பொறியியல் துறை மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கிலோமீட்டர் நீளமுள்ள C மற்றும் D வாய்க்கால்கள் ரூ.10 கோடி செலவில் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், நீர்வளத்துறை மூலம் ரூ.100 கோடி செலவில் 4,971 கிலோமீட்டர் நீளமுள்ள A மற்றும் B வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளில் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்காக 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகளும், 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்காக நாளொன்றுக்கு 18 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் நீர் மேலாண்மை மேம்படுத்தப்படுவதுடன், இயந்திரமயமாக்கல் ஊக்குவிக்கப்பட்டு, நெல் சாகுபடி பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
















