"என்னென்ன அமெரிக்கப் பொருட்களுக்கு ஒப்புதல் என்பதை நாடாளுமன்றத்தில் சொல்லுங்கள்"...
ராமேஸ்வரம்: காணிக்கைப் பணத்தில் கைவைத்த சிவபக்தை; கோயிலில் தொடரும் உண்டியல் திருட்டு
காசிக்கு நிகரான புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் வந்து செல்கின்றனர்.
விழா காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின் கோயிலுக்குள் உள்ள உண்டியல்களில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த பட்டாடைகள் போன்றவற்றை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம்
.

இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்படும். இந்த எண்ணிக்கை பணியில் கோயில் ஊழியர்கள் தவிர ஆன்மிகக் குழுக்களைச் சேர்ந்த பக்தர்கள், பள்ளி மாணவிகள் எனப் பலரும் ஈடுபடுவர்.
கடந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு நேற்று நடந்தது. கோயில் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்தப் பணியில் திருச்சி துறையூர் கைலாச நாதர், சிவகாமசுந்தரி ஆன்மிக அன்பர் குழுவைச் சேர்ந்த 118 பேர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இந்தக் குழுவைச் சேர்ந்த துறையூர் ஆளத்துடையான் பட்டியைச் சேர்ந்த பிரபாவதி என்பவர் காணிக்கைப் பணத்தைத் திருடி தனது ஆடைக்குள் மறைத்து வைத்தது கோயில் அதிகாரியின் அறையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் மூலம் தெரியவந்தது.
இதனைக் கண்ட அதிகாரிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பிரபாவதியைச் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் அவர் மறைத்து வைத்திருந்த கோயில் காணிக்கைப் பணம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 670 ரூபாய் சிக்கியது.

அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் கடந்த 6 மாதங்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின்போது காணிக்கைப் பணத்தைத் திருடிய மணிகண்டன் என்பவர் சிக்கினார். கோயில் தூய்மை பணியாளரான இவர் பல முறை இது போன்று காணிக்கை திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் கோயில் காணிக்கை எண்ணும் பணிக்கு வந்திருந்த ஆன்மீக குழுவைச் சேர்ந்த சிவபக்தையே சிவனது காணிக்கைப் பணத்தினைக் களவாடிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





















