'12 மாவட்ட அரசுப் பள்ளிகள் சேதம்' - ஆய்வு செய்து சரிசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிள...
"ரெண்டு சீட் வெச்சிக்கிட்டு இவ்ளோ ஆட்டமானு கேட்குறாங்க, ஆனா..!” - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுகவை மறைமுகமாக சாடியிருக்கிறார்.
" 'இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு இவ்வளவு ஆட்டமானு கேக்குறாங்க' அவர்களிடம் இரண்டு தொகுதிகள் இல்லாததால் தான் ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.
ஆட்சி அமைக்க அந்த இரண்டு இடங்களும் அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால்தான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஆனால், நம்மை எப்படியாவது விமர்சிக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் சிலர் தொடர்ந்து செயல்படுகிறார்கள். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று அமைச்சர் பதவி பெற்றுவிட்டார்கள். அதனை நாங்கள் பெரிய விஷயமாகவோ, சாதனையாகவோ நினைக்கவில்லை.
சாதி அடிப்படையிலான வன்கொடுமைகளும் ஒரே நாளில் முடிவுக்கு வரப்போவதில்லை. ஆட்சி மாறினாலும் இதுபோன்ற சமூகப் பிரச்னைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
அதற்கு ஆட்சியில் இருப்பவர்களை மட்டும் முழுமையாகக் குற்றம் சொல்ல முடியாது. திமுக ஆட்சி இருந்தாலும், அதிமுக ஆட்சி இருந்தாலும், தற்போது தவெக ஆட்சி இருந்தாலும், நாளை நாமே ஆட்சிக்கு வந்தாலும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள இந்த தீமைகளை உடனடியாக ஒழிக்க முடியாது.
இந்த கருத்தை நான் முன்பும் பல முறை கூறியிருக்கிறேன். திமுக ஆட்சிக் காலத்திலும் இதையே பேசியபோது, சிலர் என்னை திமுகவுக்கு ஆதரவாகப் பேசுபவர் என்று விமர்சித்தனர். யார் ஆட்சியில் இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு கூட்டணியில் இருப்பதால் மற்றவர்களுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது, நட்பு வைத்திருக்கக்கூடாது என்று கூறுவது சரியான அணுகுமுறை அல்ல. அவ்வாறு நடந்தால் அது நம்பிக்கைக்கு எதிரானது, துரோகம் என்று கூறப்படுவது ஆரோக்கியமான அரசியல் அல்ல.
இத்தகைய மனநிலைகள் தற்போது அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. சமூகநீதி மற்றும் இடதுசாரி சிந்தனைகளை முன்னிறுத்தும் அரசியல் பாதையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" என்று பேசியிருக்கிறார்.











