பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் ...
'12 மாவட்ட அரசுப் பள்ளிகள் சேதம்' - ஆய்வு செய்து சரிசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் வல்லாதிரக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “விருதுநகர், திருச்சி, நெல்லை, திண்டுக்கல், கரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்ட அரசுப் பள்ளி கட்டிடங்க சேதங்கள், தேவைகள் தொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கட்டிடங்களில் சேதம் இருப்பது உறுதியாகி உள்ளது.
வகுப்பறை, சமையலறை, கழிவறை, சுற்றுச்சுவர், குடிநீர் வசதி போன்றவை பல பள்ளிகளுக்குத் தேவையாக உள்ளன. பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் இருப்பதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளை அவ்வப்போது ஆய்வு செய்து அவை தரமானதாகவும் சுத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும். பருவமழை தொடங்க உள்ளதால் சேதமடைந்த பள்ளிகளின் கட்டிடங்கள், சுற்றுசுவர்கள், கழிவறை, சமையலறை ஆகியவற்றை குறுகிய காலத்தில் கட்டி முடிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபகள் பிறப்பித்த உத்தரவில், “12 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியையும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.
மேலும் சுகாதாரம், தூய்மை மற்றும் பிற அடிப்படை வசதிகள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து அறிக்கைகளைப் பெற்று அவற்றை தொகுத்து முதன்மைகல்வி அதிகாரிகள் இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதிலும் குறிப்பாக குடிநீர், வடிகால் வசதி, பள்ளியைச் சுற்றி புதர்கள் அல்லது களைகள் உள்ளனவா? என்பன தொடர்பான விபரங்களுடன் ஆகஸ்ட் 24 ஆம் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் கண்டறியப்படும் குறைபாடுகளில் உடனே சரி செய்யப்பட வேண்டிய தேவை இருப்பின், நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்காமல் தலைமை கல்வி அலுவலர்கள் தேவையான பணிகளை மேற்கொண்டு அவற்றைச் சரி செய்து அது தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
பள்ளிகளைத் தூய்மையாகப் பராமரிக்க தற்காலிக தூய்மைப் பணியாளர்களை நியமிக்க சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்தும் தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.



















