RR VS SRH: "சாதனைகளை விட கோப்பையை வெல்வதே என் ஒரே இலக்கு!" - ஆட்டநாயகன் வைபவ் சூ...
வாணியம்பாடி: திருநங்கையைத் தாக்கிய இளைஞன் கைது; ஓராண்டு திருமண வாழ்க்கை; ஊர் சுற்ற பைக்
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் திருநங்கை பூமிகா. இவரும், கோனாமேடு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் வல்லரசு என்பவரும் காதலித்து, ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
எந்த வேலைக்கும் செல்லாத வல்லரசு ஊர் சுற்றுவதற்காக பைக் வாங்கிக்கொடுத்து, தினமும் செலவுக்கு பணமும் கொடுத்திருக்கிறார் திருநங்கை பூமிகா.
இந்த நிலையில், சமீபகாலமாக ஒரு பெண்ணுடன் வல்லரசு தொடர்பிலிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், பூமிகாவுக்குத் தெரியவந்ததையடுத்து, வல்லரசுடன் அவர் சண்டைப் போட்டிருக்கிறார்.
இருவருக்கும் இடையேயான தகராறு அதிகமானதால், பூமிகா விலகி இருந்திருக்கிறார். ஆனாலும், பூமிகாவிடம் தொந்தரவில் ஈடுபட்டு வந்திருக்கிறார் வல்லரசு.

இந்த நிலையில்தான் 26-ம் தேதி இரவு பூமிகாவுக்குப் போன் செய்த வல்லரசு, `நேர்ல பேசணும் வா’ என்றுகூறி ஒரு வீட்டுமனை பகுதிக்கு அழைத்திருக்கிறார். திருநங்கை பூமிகாவும் தனியாகச் சென்றார். அங்கு மது குடித்துக்கொண்டிருந்த வல்லரசு ஆத்திரப்பட்டு பூமிகாவைத் தாக்கியிருக்கிறார்.
தகாத வார்த்தைகளால் கடுமையாகப் பேசி, மதுபாட்டிலை உடைத்து குத்தியிருக்கிறார். இதில், பூமிகாவுக்கு தாடைப் பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது. பலத்த காயமடைந்த அவர் கதறித் துடித்ததால், வல்லரசு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து, தனது சகோதரனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்திருக்கிறார் பூமிகா. அவர் உறவினர்களுடன் விரைந்து வந்து பூமிகாவை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். பிறகு, மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தப்பிஓடிய வல்லரசை சக திருநங்கைகளே தேடிப்பிடித்து வாணியம்பாடி நகரக் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து, போலீஸார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து வல்லரசைக் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீரென வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ``கடந்த ஏப்ரல் மாதம், தார்னிகா என்ற திருநங்கையும் காதலித்து ஏமாற்றப்பட்ட மனவேதனையில் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இப்போது ஒரு திருநங்கை கொலை முயற்சியில் படுகாயமடைந்திருக்கிறார்.
இந்த வழக்கை திரும்பப் பெறக்கோரி, வல்லரசின் தாய்மாமன் போன் மூலம் மிரட்டுகிறார். திருநங்கைகள் சமுதாயத்துக்குப் பாதுகாப்பில்லை’’ என்றனர். போலீஸார் சமரசம் செய்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.




















