தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனைக் கூட்டம்; தமிழக எம்பி-க்களை அழைக்கும் தவ...
வேளாண் பட்ஜெட்: "பழைய பட்ஜெட் புத்தகத்தையே திருப்பி வாசித்திருக்கின்றனர்" - MRK பன்னீர்செல்வம்
இன்று தங்களுடைய முதல் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது தவெக அரசு.
இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்புகளைச் சாடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு வேளாண் துறையின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
அவர் பேசியதாவது...
''புதிய அரசு பொறுப்பேற்றுத் தாக்கல் செய்துள்ள முதல் வேளாண் பட்ஜெட்டைத் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் பல புதிய அறிவிப்புகள் வரும் என்ற பேரார்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

மாற்றம் என்றால் இதுதான்!
ஆனால், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்தப் பட்ஜெட்டைப் பார்த்தபோது, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பழைய புத்தகத்தையே மீண்டும் உட்கார்ந்து வாசிப்பது போன்ற உணர்வும், ஏழாவது முறையாகப் பழைய பட்ஜெட்டையே 'ரிகர்சல்' பார்ப்பது போன்ற உணர்வுமே ஏற்பட்டது.
'மாற்றம்' என்று கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், முந்தைய அரசை விட அதிக திட்டங்களைச் செய்து கொடுத்தால்தான் அது உண்மையான மாற்றமாக இருக்க முடியும்.
4,000 ரூபாய்க்குப் பதிலாக 10,000 ரூபாய் கொடுப்பதும், 50% மானியத்திற்குப் பதிலாக 100% மானியம் வழங்குவதுமே மாற்றமாகும். ஆனால், இந்தப் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாமல் பழைய நிலையே நீடிக்கிறது.
கர்நாடகா செல்வதெல்லாம் நாடகமே
தேர்தலுக்கு முன்பு தஞ்சாவூரில் பேசும்போது, 'அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும்' என்று கூறியது வெறும் மேடை வசனம்தானா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும்.
காவிரி நீர் பிரச்னைக்காக கர்நாடக முதலமைச்சரைச் சந்திக்கப் போவதாகக் கூறுவதெல்லாம் நாடகமே தவிர வேறில்லை.
விவசாயிகளுக்காகப் போராடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தோழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் கைது நடவடிக்கைகளும் மக்களிடையே ஒரு மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியுள்ளன.

முந்தைய ஆட்சியில் விவசாயிகள் நிம்மதி
மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதிகள் காய்ந்து கிடப்பதோடு, குறுவை சாகுபடியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. 20,000 கோடி ரூபாய் வரையிலான வட்டியில்லா கடனைக் கட்ட முடியாமல் விவசாயிகள் வட்டி அபாயத்தைச் சந்தித்து வருகின்றனர். மேலும், 3-பேஸ் மின்சாரம் சரியாகக் கிடைக்காமல் தடையற்ற மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியில் விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற மூன்று மாதங்களிலேயே விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியான கடன் தள்ளுபடி நடக்கும் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் போராடுகிறார்கள். மூன்று மாதங்களில் 20,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ள இந்த அரசு, கலைஞர் பெயரில் இருந்த திட்டங்களின் பெயர்களை மாற்றுவதையே முதன்மை வேலையாகக் கொண்டுள்ளது.
அமைச்சர் நிர்மல் குமார் நிதி ஆதாயம் பற்றிப் பேசினாலும், இவரது ஆட்சியில் மின்சாரத் தடை தொடர்கிறது. டைடல் பார்க், இலவசக் கல்வி போன்ற திட்டங்கள் அனைத்தும் கலைஞர் விதைத்த விதைகளாகும். மேகதாட்டு பிரச்னைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டக்கூட இவர்கள் தயங்குகிறார்கள்.
சுருக்கமாகக் கூறினால், இந்தப் பட்ஜெட் விவசாயிகளுக்குப் பேரேமாற்றத்தையே அளித்துள்ளது".















