"கொள்முதல் செய்த நெலுக்கு பணம் இல்லை" - முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோர...
717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசு: "சட்டவிரோத சந்துக் கடைகள்..." - மது ஒழிப்பு இயக்கம் கூறுவது என்ன?
"மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்குப் பதிலாகச் சட்டவிரோத 'சந்துக்கடைகள்', கள்ளச்சாராய விற்பனை மையங்கள் உருவாகாமல் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று 'தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு' தெரிவித்துள்ளது.

மதுக்கடைகளை மூட பல போராட்டங்களையும், தமிழகம் முழுவதும் கருத்தரங்குகளையும் நடத்தி, அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு.
இதுகுறித்து இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில், "வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பதை தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு மனமார வரவேற்கிறது.
மதுக்கடைகள் மூடப்படுவது, பெண்கள், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் நீண்ட காலமாக முன்வைத்து கோரிக்கைகளுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
தமிழகத்தின் ஏழ்மை, வறுமை, இளம்பெண் கைம்பெண்ணாதல், குடும்ப வன்முறை அதிகரித்தல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக விபத்துகள் நடப்பதற்கு என பல்வேறு காரணங்களுக்கு மதுவே காரணமாகிறது.
தொடர்ந்து இது அதிகரித்து வரும் நிலையில் அரசின் இந்த நடவடிக்கை சமூக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கிறோம்.

மேலும், மூடப்படும் 717 கடைகளைப் பிற இடங்களில் தொடங்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளக்கூடாது. மூடப்பட்ட கடைகளுக்குப் பதிலாக சட்டவிரோத 'சந்துக் கடைகள்', கள்ளச்சாராய விற்பனை மையங்கள் உருவாகாமல் தடுக்கும் வகையில், தீவிர கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதோடு, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நோக்கி அரசு படிப்படியாக நகர வேண்டும்.
டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மது மற்றும் போதைப் பழக்க மீட்பு மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும்.
மனநல ஆலோசகர்கள், சமூகப்பணியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் இணைந்து செயல்படும் முழுமையான மறுவாழ்வு அமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.
717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதன் காரணமாகப் பணி இழக்கும் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு, அரசின் பிற துறைகளில் அவர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்
அத்துடன், மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள், இளைஞர்களுக்கான மாற்று வாய்ப்புகள், குடும்ப நல பாதுகாப்பு திட்டங்கள் ஆகியவற்றையும் அரசு விரிவுபடுத்த வேண்டும்.
தமிழக மக்களின் நீண்ட நாள் கனவான மதுவிலக்கு நோக்கி முன்னேறும் அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்து ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.





.jpeg)








