Athiradi: "எனக்கு பேசில் ஜோசப் சின்ன ரோல்தான் நடிக்கக் கொடுத்தான்" - சென்னையில் ...
Athiradi: "எனக்கு பேசில் ஜோசப் சின்ன ரோல்தான் நடிக்கக் கொடுத்தான்" - சென்னையில் சஞ்சு சாம்சன் கலகல
இன்று (17.05.2026) சென்னையில் நடைபெற்ற ‘அதிரடி’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட், சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இரட்டை விருந்தாக அமைந்தது.
அருண் அனிருத்தன் இயக்கத்தில், டோவினோ தாமஸ், பாசில் ஜோசப், ரியா ஷிபு நடிப்பில் கடந்த மே 14 அன்று மலையாளத்தில் 'அதிரடி' வெளியானது.

மே 22 அன்று தமிழில் டப் செய்யப்பட்டு இப்படம் வெளியாகவுள்ளது. படக்குழுவினருடன் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனும் சிறப்பு விருந்தினராக இவ்விழாவில் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய சஞ்சு சாம்சன், "எனக்கு சினிமா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது முற்றிலும் புதிய அனுபவம். என்னுடைய நண்பர் பேசில் கூப்பிட்ட உடனே நான் வந்தே தீர வேண்டும் என்று கிளம்பி வந்துவிட்டேன்" என்றவரிடம், "பேசில் படத்தில் நடிக்கக் கூப்பிட்டபோது ஏன் மறுத்தீர்கள்?" என்ற கேள்விக்கு சஞ்சு, "அவன் எனக்கு மிகவும் சிறிய கதாபாத்திரம்தான் கொடுத்தான்.
எனக்குப் பெரிய கதாபாத்திரம் கொடுத்தால் மட்டும்தான் நான் நடிப்பேன் (சிரித்துக்கொண்டே). நேரில் ரொம்பவும் சாதாரணமாக இருக்கும் பேசில், வேலை என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பான நபர். ஒரு வாரத்திற்கு முன்பே தனக்கான விஷயங்களைத் திட்டமிடும் அளவிற்குப் பிஸியான இயக்குநர்" என்றார்.

தொடர்ந்து பேசிய பேசில் ஜோசப், "இப்படத்தைத் தமிழில் சும்மா டப் செய்யாமல், தமிழ் கலாசாரத்திற்கு ஏற்ப வசனங்களை எழுத்தாளர் நெல்லியன் என்பவரை வைத்து மாற்றி எழுதியிருக்கிறோம்.
தமிழ் ரசிகர்களுக்காகப் பல ரெஃபரன்ஸ் பாடல்களையும் பயன்படுத்தியிருக்கிறோம். எனக்கு எப்போதுமே இயக்கம்தான் முதல் முன்னுரிமை. இயக்குவது என்பது ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்து வண்டி ஓட்டுவது போன்றது.
நடிப்பது என்பது சீட்டில் அமர்ந்து பயணிப்பது போன்றது. மேலும், நான் நடித்துள்ள ‘ராவடி’ என்ற நேரடி தமிழ்ப் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது" என்றார்.
விழாவின் இறுதியில், சஞ்சு சாம்சனுக்கு சிஎஸ்கே (CSK) ஜெர்சி பரிசாக வழங்கப்பட, அதில் அவர் கையெழுத்திட்டுப் படக்குழுவினருக்குத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

















