Ban NEET போராட்டம்: ``அடிக்காதீர்கள் என காலில் விழுந்து மாணவர்கள் கெஞ்சினார்கள் ...
Ban NEET போராட்டம்: ``அடிக்காதீர்கள் என காலில் விழுந்து மாணவர்கள் கெஞ்சினார்கள் " - நடிகை ரேவதி
டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய நடிகையும் இயக்குநருமான ரேவதி, ``இன்றைய சூழலில் நீட் தேர்வு குறித்து விரிவாகப் பேச எனக்கு முழுமையான அறிவு மற்றும் தரவுகள் போதாது.

இருப்பினும், நீட் வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட இளம் மாணவர்களின் போராட்டமும், அதற்கு எதிரான அடக்குமுறைகளும் என்னை மிகவும் பாதித்தது. தடியடியின் போது காலில் விழுந்து அடிக்காதீர்கள் என மாணவர்கள் கெஞ்சினார்கள். அந்த வீடியோக்களையெல்லாம் பார்க்கும்போது மனம் வெதும்பியது. மாணவர்கள் தங்களின் எதிர்காலத்திற்காக ஜூலை மாதக் கடும் குளிரிலும் மழையிலும், தரையில் தங்கி 25 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 16 வயது சிறுவன் ஒருவன், 'நான் தவறு எதுவும் செய்யவில்லை, என் உரிமைகளுக்காகவும் டாக்டர் கனவுக்காகவுமே இங்கு நிற்கிறேன்' என்று தைரியமாக வாதிட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
முந்தைய தலைமுறையினர் அச்சம் காரணமாகத் தட்டிக் கேட்கத் தயங்கிய பல விஷயங்களை, இன்றைய 'ஜென்-ஜி' தலைமுறையினர் எந்தவித பயமுமின்றி, தங்களுக்குரிய உரிமைகளை உணர்ந்து துணிச்சலாகக் கேட்கின்றனர். காவல்துறையினர் அடிக்க வரும்போது, தேசிய கீதத்தைப் பாடி அவர்களை அமைதியடையச் செய்யும் அவர்களின் புத்திசாலித்தனமான அணுகுமுறை உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

எனவே, மற்றவர்கள் சொல்வதைக் கிளிப்பிள்ளை போல் திரும்பச் சொல்லாமல், கேள்வி கேட்டு, ஆராய்ந்து உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் இந்த இளைய தலைமுறையின் செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை. முந்தைய தலைமுறை செய்யத் தவறியதை இவர்கள் செய்கிறார்கள். இளைஞர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடக் கூடாது, அதே சமயம் கல்வியையும் கேள்வி கேட்கும் குணத்தையும் எப்போதும் விட்டுவிடக் கூடாது. இளைஞர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்குத் என் முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன்." என்றார்.








