Bhagyaraj: திரைக்கதை மன்னனை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள்! - பாக்யராஜ் பகிர்வு
Bhagyaraj: திரைக்கதை மன்னன்; அமிதாப் பச்சனின் அழைப்பு - பாக்யராஜ் பற்றிய முக்கிய தகவல்கள்!
நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார். இவருடைய மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 'திரைக்கதை மன்னன்' என அழைக்கப்பட்டவர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகத் தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவர். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக மட்டுமல்லாமல், வசனகர்த்தாவாகவும் சில படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

அங்கு எழுத்தில் தன்னுடைய திறமையை நிரூபித்தவர், 1979-ல் 'சுவரில்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரும் நடித்திருப்பார். பிறகு, இவருடைய குரு பாரதிராஜா இயக்கிய 'புதிய வார்ப்புகள்' படத்தில் பாக்யராஜையே முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
பிறகு டைரக்ஷனில், 'இன்று போய் நாளை வா', 'அந்த 7 நாட்கள்', 'தூறல் நின்னு போச்சு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'முந்தானை முடிச்சு', என அடுத்தடுத்து ஹிட்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தார். பாக்யராஜ், திரைக்கதை மன்னன் எனத் தனித்துக் கொண்டாடப்படுவதற்குச் சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அவருடைய கதையின் மாந்தர்கள், அவர்கள் நிகழ்த்தும் விஷயங்கள், அவர்கள் பேசும் வசனங்கள் என அனைத்தும் எதார்த்தமானதாக இருக்கும். அப்படியான கதாபாத்திரங்களை நம் இயல்பு வாழ்க்கையிலும் பொருத்திப் பார்க்க முடியும். இப்படியான விஷயங்களை நகைச்சுவையோடு சேர்த்து, சுவாரஸ்யமான திரைமொழியில் அவர் தொடர்ந்து கொடுத்ததினாலேயே அவர் 'திரைக்கதை மன்னன்' எனக் கொண்டாடப்படுகிறார்.

நடிகை ஊர்வசியைத் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தது பாக்யராஜ்தான். இன்று கிளாசிக் படமாகக் கொண்டாடப்படும் 'முந்தானை முடிச்சு' படத்தில், ஊர்வசியை அறிமுகப்படுத்தினார். இப்படத்திற்கு முன்பு ஊர்வசி மலையாள சினிமாவில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் இதுதான். ஊர்வசியின் சகோதரியான கல்பனாவைத் தமிழில் அறிமுகப்படுத்தியதும் பாக்யராஜ்தான்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'ஒரு கைதியின் டைரி' படத்தின் திரைக்கதையாசிரியர் பாக்யராஜ்தான். அப்படத்தை இந்தியிலும் ரீமேக் செய்யும் வாய்ப்பு பாக்யராஜுக்குக் கிடைத்தது. இப்படம் இந்தியில் ரீமேக் செய்வது என முடிவு செய்யப்பட்ட பிறகு, ''இதன் திரைக்கதையை எழுதியவர் யார்?" என்று அமிதாப் பச்சன் கேட்டிருக்கிறார். அது பாக்யராஜ் என்று தெரிந்ததும், "அவரையே இந்தி வடிவத்தையும் இயக்கச் சொல்லுங்கள். அவர்தான் கதையின் ஆன்மாவைச் சரியாகக் கொண்டு வர முடியும்" என்று அமிதாப் பச்சன் தெரிவித்திருக்கிறார். பிறகு, பாலிவுட்டிற்குச் சென்று இப்படத்தை இயக்கினார் பாக்யராஜ். இப்படத்தில் அமிதாப் பச்சன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

இவருடைய உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள், பிறகு கோலிவுட்டுக்குச் சில முக்கியமான படைப்புகளையும் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, பார்த்திபன் பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்; பின்னர் 'புதிய பாதை' படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகித் தேசிய விருது பெற்றார். 'ஆண்பாவம்' உள்ளிட்ட பல ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜனும், பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்தான்.
இப்படி இயக்குநர், திரைக்கதையாசிரியர் என்பதைத் தாண்டி நடிகராகவும் உச்சத்தைத் தொட்டவர் பாக்யராஜ். பாக்யராஜ் நடித்த படங்களில் அதிரடி சண்டைக் காட்சிகளோ, பிரம்மாண்டமான ஓப்பனிங் சீன்களோ இருக்காது. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு அவர் ஃபேமிலி ஹீரோவாக உருவெடுத்தார். பாக்யராஜ் எழுத்தின் மீதுள்ள ஆர்வத்தால் 'பாக்யா' என்ற பெயரில் ஒரு வார இதழைத் தொடங்கினார். இந்த இதழில் வெளிவந்த கேள்வி-பதில்தான் இந்த இதழின் முக்கியமான பகுதி. வாசகர்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் தன்னுடைய பாணியில் இதில் பதில் கொடுத்து வந்தார்.

இப்படிப் பல துறைகளிலும் தன்னுடைய பென்ச்மார்க்கைக் கொடுத்திருக்கிறார் பாக்யராஜ். ஒரு சுவாரஸ்யமான கதையை எப்படி நேர்த்தியான திரைக்கதையாக மாற்ற வேண்டும் என்பதற்குப் பாக்யராஜின் படைப்புகள் எடுத்துக்காட்டாக தமிழ் சினிமாவில் என்றென்றும் நிலைத்திருக்கும்!
இளப்பாறுங்கள் பாக்யராஜ் சார்!
















