State Awards: "எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக இதை முன்வைக்கவில்லை" - 'கை...
Bollywood: ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு; மர்ம நபர்களுக்கு வலை; என்ன நடந்தது?
பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, சிங்கம், கோல்மால் உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார். மும்பையில் அவரது வீடு ஜுகுவில் இருக்கிறது.
இன்று அதிகாலையில் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் வெளியில் இருந்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரோஹித் ஷெட்டி வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார் என்று தெரியவில்லை. இத்துப்பாக்கிச்சூடு நடந்தபோது ரோஹித் ஷெட்டி வீட்டில் இருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை. அதேசமயம் துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்ததை மும்பை போலீஸ் கமிஷனர் உறுதிபடுத்தியிருக்கிறார்.
மும்பை போலீஸாரும், குற்றப்பிரிவு போலீஸாரும் இணைந்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் சர்வதேச கும்பலுக்குத் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு குறித்து ரோஹித் ஷெட்டி குடும்பத்தினர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரோஹித் ஷெட்டி இதுவரை 17 படங்களை இயக்கி இருக்கிறார்.
இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது 2024 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சிறையில் இருக்கும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்குப் பொறுப்பு ஏற்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைக் கைது செய்தனர்.
இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு சல்மான் கான் வீட்டிற்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர். சல்மான் கானும் எப்போதும் குண்டு துளைக்காத கார்களையே பயன்படுத்தி வருகிறார்.
















