``ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" - தஸ்லிமா நஸ்ரீன்
``ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" - தஸ்லிமா நஸ்ரீன்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்திருந்தனர்.
அதில் ஒருவராக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம், இந்தியாவில் அவர் அடைந்துள்ள புகழ் ஈடு இணையற்றது. நான் கேள்விப்பட்டவரை, மற்ற அனைத்து கலைஞர்களை விடவும் அவருடைய ஊதியம் மிக அதிகம். அநேகமாக அவர்தான் பணக்கார இசையமைப்பாளராக இருப்பார்.

ஆனால், தான் ஒரு முஸ்லிம் என்பதால் பாலிவுட்டில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அவர் புகார் கூறுகிறார். ஷாருக் கான் இன்னும் பாலிவுட்டின் பாட்ஷாவாகவே இருக்கிறார்; சல்மான் கான், ஆமீர் கான், ஜாவேத் அக்தர், ஷபானா ஆஸ்மி என இவர்களெல்லாம் இன்றும் சூப்பர் ஸ்டார்களாகவே வலம் வருகிறார்கள்.
புகழ் பெற்றவர்களும், பணக்காரர்களும் எந்தச் சூழலிலும் சிரமங்களை எதிர்கொள்வதில்லை. அவர்கள் எந்த மதம், எந்தச் சாதி அல்லது எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி.
சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன. நான் ஒரு தீவிர நாத்திகனாக இருந்தபோதிலும், எனது பெயரைக் காரணம்காட்டி நான் ஒரு முஸ்லிம் என்றே கருதப்படுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிரானவர்களுக்கு, ஒருவன் நாத்திகனா அல்லது இறை நம்பிக்கையாளனா என்பது ஒரு பொருட்டே அல்ல.
எனக்கு யாரும் வாடகைக்கு வீடு தர முன்வருவதில்லை. நான் மருத்துவமனைக்குச் சென்றால், என்னை ஏமாற்றி என் காலையே துண்டித்து விடுகிறார்கள். ஹைதராபாத்தில் நாத்திகனாக இருப்பதற்காகவே நான் அடிபடுகிறேன்; ஔரங்காபாத்தில் என்னால் காலடி எடுத்து வைக்க முடியவில்லை; மேற்கு வங்கத்திலிருந்து நான் வெளியேற்றப்படுகிறேன்.

இந்தத் துயரங்கள் ஏ. ஆர். ரஹ்மானின் வாழ்க்கை எல்லைக்குள்ளோ அல்லது பாலிவுட்டில் இருக்கும் முஸ்லிம் நட்சத்திரங்களின் வாழ்க்கைக்கோ அருகில்கூட வருவதில்லை.
நான் இந்த நாட்டின் குடிமகள் அல்ல. இந்தியாவில் பிறந்த பலரை விடவும், நான் இந்த நாட்டை அதிகம் நேசிக்கிறேன். எனக்கு ஓட்டுரிமை இல்லாவிட்டாலும், என் கொள்கைகளுக்காகப் போராடிக்கொண்டு இந்த மண்ணிலேயே வாழ்கிறேன்.
இஸ்லாத்தின் வெற்றுச் சடங்குகளையும் மூர்க்கத்தனத்தையும் கிழித்தெறிந்த பிறகு நான் நாடு கடத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இருந்தும் மக்கள் என்னிடம் வந்து, "நீங்கள் பிறை பார்த்து ஈகைத் திருநாளைக் கொண்டாடுகிறீர்கள்" என்றோ அல்லது "உங்களிடையே பலதார மணம் நடைமுறையில் உள்ளது" என்றோ கூறுகிறார்கள். இந்த நாட்டின் சாமானிய மக்களுக்கு நாத்திகத்தைப் பற்றியோ, அதன் அடிப்படையில் அமைந்த மனிதநேயத்தைப் பற்றியோ ஏதும் தெரிந்திருக்கவில்லை.
என்னால் உண்மையில் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த மண்ணின் மனிதர்களும் பெண்களும் என் சொந்தங்களே. இந்த மண்ணின் கலாசாரமே எனது கலாசாரமும் கூட. இதை விட்டுவிட்டு என்னால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்?

ஏ. ஆர். ரஹ்மானை இந்துக்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள் மற்றும் நம்பிக்கையாளர்கள் என அனைவரும் மதிக்கிறார்கள். அவர் தன்னை ஒரு பரிதாபத்திற்குரியவராகக் காட்டிக் கொள்வது அவருக்குப் பொருத்தமானதல்ல." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகதான் ஏ.ஆர்.ரஹ்மான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``யாரையும் புண்படுத்தும் எண்ணம் என்னுடைய நோக்கமில்லை. இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்" எனத் தெரிவித்திருந்தார்.


















