`மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, ...
Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?
Doctor Vikatan: என் நண்பருக்கு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பேச்சு வராமல் மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் இது 'பெயின் ஸ்ட்ரோக்' என்றும், அரிதினும் அரிதாக சிலருக்கு இப்படி வரும் என்றும் சொன்னார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது... இதற்கு என்ன தீர்வு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

``மருத்துவ ரீதியாக இது உண்மையான பக்கவாதம் (True Stroke) அல்ல. உடலில் ஏற்படும் அதீத வலி அல்லது அதிர்ச்சியின் காரணமாக, மூளைக்குச் செல்லும் தற்காலிகச் சமிக்ஞைகளில் ஏற்படும் மாற்றத்தால் பக்கவாதம் போன்ற அறிகுறிகள் தோன்றுவதையே இப்படிச் சொல்கிறார்கள். இந்த அறிகுறிகளை 'ஸ்ட்ரோக் மிமிக்கர்ஸ்' என்று சொல்வோம்.
கடுமையான வலி (Intense pain) சில நேரங்களில் குமட்டல், வாந்தி அல்லது மயக்க நிலையைக்கூட ஏற்படுத்தலாம். சிலருக்கு பக்கவாதம் போன்ற அறிகுறிகள் (Stroke-like symptoms) கூடத் தோன்றலாம். வலி கொஞ்சம் குறைந்தவுடன் இந்த அறிகுறிகள் சரியாகிவிடும். எனவே, இது உண்மையான பக்கவாதம் (True stroke) கிடையாது.
உதாரணத்திற்கு, மிகக் கடுமையான தலைவலி அல்லது மைக்ரேன் (Migraine) பாதிப்பு இருக்கும்போது கூட, பக்கவாதம் போன்ற அறிகுறிகள் வரலாம். அவர்களுக்குக் கை, கால்களில் மரத்துப்போதல் (Numbness), பலவீனம் அல்லது திடீரென பார்வை மங்குதல் (Vision loss) போன்றவை ஏற்படலாம்.

இவை அனைத்தும் பக்கவாதம் போலவே தோன்றும் (Stroke mimics). ஆனால், அந்த வலி சரியான பிறகு அவர்கள் குணமடைந்து விடுவார்கள். எனவே, கடுமையான வலி இத்தகைய அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும், ஆனால் இது உண்மையான பக்கவாதம் அல்ல.
உங்கள் நண்பருக்கு ஏற்பட்டது பக்கவாதம் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள் என்றால், அவர்களின் ஆலோசனைப்படி முறையான ஓய்வு மற்றும் அவசியமான மருந்துகள் மூலம் இதிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.






















