Dhoni: "இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் ஒன்று" - டி20 உலகக்கோப்பை க...
Doctor Vikatan: விட்டுவிட்டுத் தொடரும் காய்ச்சல்; கேன்சர் அறிகுறியாக இருக்கலாம் என்பது உண்மையா?
Doctor Vikatan: என் நண்பர் ஒருவருக்குக் கடந்த சில மாதங்களாக அடிக்கடி விட்டுவிட்டுக் காய்ச்சல் வந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது மருத்துவரைப் பார்ப்பதும், பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வதுமாக இருந்தார்.
சமீபத்தில்தான் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அடிக்கடி வந்த காய்ச்சல் அதன் அறிகுறியாக இருக்கலாம் என்று சொன்னார்களாம் மருத்துவர்கள். காய்ச்சல் என்பது கேன்சரின் அறிகுறியாக இருக்கும் என்பதே எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு வாய்ப்பு உண்டா...?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.

உங்கள் நண்பர் விஷயத்தில் மருத்துவர்கள் சொன்ன தகவல் உண்மைதான். புற்றுநோயின் பொதுவான, அதேசமயம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்படும் ஓர் அறிகுறி காய்ச்சல். இது குறிப்பாக புற்றுநோய் முற்றிய நிலையிலோ அல்லது நிணநீர் புற்றுநோய் (lymphoma) மற்றும் ரத்தப் புற்றுநோய் (leukemia) போன்ற ரத்தம் தொடர்பான புற்றுநோய்களிலோ அதிகமாகக் காணப்படுகிறது.
புற்றுநோய் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும்போதோ, உடலில் வீக்கத்தை (inflammation) ஏற்படுத்தும்போதோ அல்லது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் சில வேதிப்பொருள்களை வெளியிடும்போதோ இதுபோன்ற காய்ச்சல் ஏற்படுகிறது.
நீண்ட நாள்களாகத் தொடரும் அல்லது காரணமே தெரியாமல் வரும் காய்ச்சலுக்கு முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். ரத்தப் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், தசை, நரம்புகள், கொழுப்பு மற்றும் ரத்த நாளங்கள் போன்ற உடலின் துணை திசுக்களில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவை அடிக்கடி காய்ச்சலை உண்டாக்குகின்றன.
புற்றுநோய் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவிய பிறகு பெரும்பாலும் காய்ச்சல் தோன்றும். இருப்பினும், ரத்தப் புற்றுநோய்களில் இது ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம்.

புற்றுநோயின் நேரடி பாதிப்பால் (neoplastic fever) காய்ச்சல் ஏற்படலாம் அல்லது கீமோதெரபி போன்ற சிகிச்சைகளால் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் போதும் காய்ச்சல் வரலாம். இந்தக் காய்ச்சல் அவ்வப்போது வந்து போகும் தன்மையுடையது. தொடர்ந்து பல நாள்கள் அல்லது வாரங்கள் நீடிக்கலாம். சில வகை புற்றுநோய்கள், இரவில் வியர்வை மற்றும் அதிக வெப்பநிலையை ஏற்படுத்துகின்றன.
சாதாரண காய்ச்சல் மருந்துகள் (பாராசிட்டமால் போன்றவை) தற்காலிகமாக வெப்பத்தைக் குறைத்தாலும், காய்ச்சல் மீண்டும் மீண்டும் வரும். உங்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ இத்தகைய அறிகுறி இருந்தால், மருத்துவர்கள் பொதுவாகக் கீழ்க்காணும் சோதனைகளைப் பரிந்துரைப்பார்கள்.
ரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்களின் அளவை அறியும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ரத்தப் புற்றுநோயைக் கண்டறிவதில் இது முதல்படி.
ESR மற்றும் CRP போன்ற சோதனைகள், உடலில் வீக்கம் (Inflammation) உள்ளதா என்பதைக் கண்டறியும். கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளுக்கான பரிசோதனைகளின் மூலம் உறுப்புகளின் பாதிப்பைக் கண்டறியலாம்.
மார்பு எக்ஸ்-ரே (X-ray), சிடி ஸ்கேன் (CT Scan) அல்லது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் உடலில் கட்டிகள் ஏதேனும் உள்ளனவா என்று பார்க்கப்படும். சந்தேகம் இருக்கும் இடத்தில் இருந்து திசுக்களை எடுத்து ஆய்வு செய்யும் பயாப்ஸி (Biopsy) சோதனையும் தேவைப்படலாம்.

உடல் வெப்பநிலை 101°F (38.3°C) க்கும் மேல் தொடர்ந்தாலோ, திடீரென உடல் எடை குறைந்தாலோ, தீராத சோர்வு மற்றும் பசியின்மை இருந்தாலோ, கழுத்து, அக்குள் அல்லது இடுப்புப் பகுதியில் வீக்கங்கள் (Lumps) தென்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
காய்ச்சல் என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் ஏதோ ஒரு கிருமிக்கு எதிராகப் போராடுகிறது என்பதன் அடையாளம் மட்டுமே. எல்லா காய்ச்சலும் புற்றுநோய் அல்ல, ஆனால், காரணமில்லாத காய்ச்சலை அலட்சியப்படுத்தவும் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.





















