கோவைக்கு மாறிய செந்தில் பாலாஜி; அமைச்சருக்கு இடம் இல்லை! - வெளியானது திமுக வேட்ப...
IPL: முதல்முறையாக சாம்பியனாக களம் காணும் RCB; பேட்டிங் ஓகே, பந்துவீச்சு? - அதிர்ச்சி கொடுக்குமா SRH?
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 19-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 28) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில், கடந்த ஆண்டின் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்கிறது.
18 சீசன்களாகக் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த 'ஈ சாலா கப் நம்தே' கோஷம், கடந்த 2025-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் நிஜமானது. வரலாற்றில் முதன்முறையாக, நடப்பு சாம்பியன் என்ற கம்பீரத்துடன் ஆர்சிபி அணி இன்று தனது சொந்த மண்ணில் களமிறங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், இந்த முறையும் சாம்பியன் ஆட்டத்தைத் தொடர வேண்டிய அழுத்தம் அந்த அணிக்கு உள்ளது.

மறுமுனையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய உத்வேகத்துடன் களமிறங்குகிறது. அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. இதனால், அதிரடி வீரர் இஷான் கிஷன் அணியை வழிநடத்த உள்ளார். முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனை வீழ்த்தி, தொடரை வெற்றியுடன் தொடங்க ஹைதராபாத் அணி கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.
கொண்டாட்டமில்லா தொடக்கம்!
வழக்கமாக ஐபிஎல் தொடக்க விழா, கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி, ஆர்சிபி அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின்போது சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். அந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், மைதானத்தில் 11 இருக்கைகள் அவர்கள் நினைவாகக் காலியாக வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் பந்துவீச்சில் பின்னடைவு!
பேட்டிங்கில் இரு அணிகளும் பலமாக இருந்தாலும், பந்துவீச்சு கவலையாக உள்ளது. கடந்த ஆண்டு ஆர்சிபி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார். அதேபோல, யாஷ் தயாள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இதனால், புவனேஷ்வர் குமார், மங்கேஷ் யாதவ் போன்ற வீரர்களை ஆர்சிபி நம்பியுள்ளது.

ஹைதராபாத் அணியிலும் இதே நிலைதான். கேப்டன் பேட் கம்மின்ஸ் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு. பிரைடன் கார்ஸ், ஜெயதேவ் உனத்கட், ஹர்ஷல் படேல் ஆகியோர் அடங்கிய பந்துவீச்சு, ஆர்சிபி-யின் பலம்வாய்ந்த பேட்டிங் வரிசையை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது பெரிய சவாலாக இருக்கும்.
ரன் மழைக்கு வாய்ப்பு?
பந்துவீச்சு பலவீனமாக இருந்தாலும், பேட்டிங்கில் பட்டையைக் கிளப்ப இரு அணிகளிலும் வீரர்களுக்கு பஞ்சம் இல்லை. ஆர்சிபி அணியில் விராட் கோலி, ரஜத் படிதார், டிம் டேவிட், பில் சால்ட் ஆகியோர் மிரட்டக் காத்திருக்கின்றனர். ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், கிளாசன், லியாம் லிவிங்ஸ்டன் என அதிரடி வீரர் பட்டாளமே உள்ளது. இதனால், சின்னசாமி மைதானத்தில் இன்று ரன் மழை பொழியும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரவு 7:30 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டத்தில், சாம்பியன் ஆர்.சி.பி தனது ஆதிக்கத்தைத் தொடருமா அல்லது ஹைதராபாத் அதிர்ச்சி கொடுக்குமா என்பது தெரிந்துவிடும்.!
போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இடம்: எம். சின்னசாமி மைதானம், பெங்களூரு
நேரம்: இரவு 7:30 மணி


















