'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' - ஈரான் மக்களுக்கு காஷ்மீர்...
'மன்னிப்பு கேட்கிறேன்'- டெல்லி அணியில் இருந்து விலகிய பென் டக்கெட்; ஐபிஎல் விளையாட 2 ஆண்டுகள் தடையா?
2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
விரைவில் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் களமிறங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் பென் டக்கெட் ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து வீரரான பென் டக்கெட்டை டெல்லி அணி ரூபாய் 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
விலகல் தொடர்பாக பேசியிருக்கும் பென் டக்கெட், "ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது நான் எடுத்த கடினமான முடிவுதான். நிறைய யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
சிறுவயதிலிருந்தே இங்கிலாந்துக்காக விளையாடுவது என் கனவாக இருந்து வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டிற்காக எனது முழு பங்களிப்பையும் வழங்க நான் விரும்புகிறேன்.
அதைச் செய்ய வேண்டுமானால், வரவிருக்கும் கோடைகாலப் போட்டிகளுக்கு முன்னதாக நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த முடிவிற்காக டெல்லி அணியினரிடமும், ரசிகர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் ஏற்படக்கூடிய இடையூறுக்கும் நான் வருந்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட சம்பந்தப்பட்ட வீரருக்கு தடை விதிக்கப்படும் என்பது விதிமுறை. அதன்படி, பென் டக்கெட் அடுத்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.



















