கூட்டணி பலத்துடன் டஃப் கொடுக்கும் திராவிட கட்சிகள்; தவெக.! - தென்காசி மாவட்டத்தி...
Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா?
ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டி இருக்கிறது. இப்போர் தொடங்கும்போது நான்கு வாரங்கள் இப்போர் நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். திடீரென ஈரான் தனது நாட்டு எல்லைக்குள் ஓடும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதையடுத்து ஈரான் மூடி இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்கவில்லையெனில், ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று டொனால்டு ட்ரம்ப் மிரட்டி இருந்தார்.
ஆனால் திடீரென ஈரானுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தை நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாகவும், ஈரான் மின் உற்பத்தி மையங்கள் மீது நடத்த திட்டமிட்டு இருந்த தாக்குதலை 5 நாள்களுக்குத் தள்ளி வைத்து இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஞாயிறன்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ஈரானியப் பிரதிநிதிகளுடன் தனது மத்திய கிழக்குத் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் தனது மருமகனும் நெருங்கிய உதவியாளருமான ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக ட்ரம்ப் கூறினார்.
அதோடு இப்பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தாலும், தற்போது அவை மிகவும் தீவிரமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், குறுகிய காலத்திற்குள்ளேயே ஒரு தீர்வு எட்டப்படக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரின் இந்தப் பேட்டி சமூக வலைதளத்தில் பெரிய அளவில் வைரலானது. ஆனால் அமெரிக்காவுடன் அது போன்று பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அதேசமயம் ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வைக்க பாகிஸ்தான், ஓமன் போன்ற நாடுகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுடன் இவ்விவகாரத்தில் நேரடியாகத்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும், மூன்றாவது நாடு மூலம் பேச மாட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இப்பேச்சுவார்த்தைக்கு இப்போது ஈரான் முறைப்படி ஒப்புதல் கொடுத்துள்ளது. இரானின் புதிய உச்சபட்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஓர் ஒப்பந்தத்தை எட்டவும் ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள் காட்டி 'அல் அரபியா' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.














