6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகும் சிஎஸ்கே அணி; கவனம் ஈர்க்கும் வீ...
திமுக-விடம் டபுள் டிஜிட்டில் தொகுதி வாங்குகிறதா தேமுதிக?
கூட்டணியில் இழுபறியாக நீடித்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. பெரிய கட்சிகளில் மீதமிருப்பது மக்கள் நீதி மய்யமும் தேமுதிகவும் மட்டுமே. இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு டபுள் டிஜிட்டலில் தொகுதிகள் ஒதுக்கப்படவிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. நிலவரம் என்னவென விசாரித்தோம்.

தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்சு கொடுக்கையில், 'கட்சியில் 84 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் 90% பேர் திமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினர். வாக்கெடுப்பின் போது அந்த கருத்தை தெளிவாக சீட்டில் எழுதியும் கொடுத்தனர். அதன்படிதான் அண்ணியார் திமுகவுடன் கூட்டணி பேசி முடித்தார்.
ராஜ்ய சபா சீட்டும் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதி வேண்டும் என்பதில் அண்ணியார் உறுதியாக இருந்தார். கடந்த 2021 தேர்தலிலேயே சீட்டு எண்ணிக்கை ஒத்துவராததால்தான் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தினகரனுடன் இணைந்து போட்டியிட்டார். அதனால் திமுகவில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் தேமுதிகவுக்கான ஏற்ற இடத்தை அண்ணியார் உறுதி செய்துவிடுவார் என நம்பினோம்.
அதன்படி திமுக தலைமையிடம் 12 சீட்டுகளை அண்ணியார் கேட்டிருக்கிறார். டபுள் டிஜிட்டில் தொகுதி ஒதுக்கப்படும் என உறுதி கொடுத்ததால்தான் கூட்டணிக்கே ஒப்பும் கொண்டார்.

நேற்று நடந்த மா.செக்கள் கூட்டத்திலும், 'நமக்கு 5-6 சீட்டுனு வெளிய பேசிக்குறாங்க. அதையெல்லாம் நம்ப வேணாம். கௌரவமான இடத்தைதான் பேசி முடிச்சிருக்கோம். நம்பிக்கையா இருங்க'னு மகிழ்ச்சியா பேசியிருந்தார். குறைந்தபட்சம் 10 தொகுதியையாவது அண்ணியார் வாங்கிட்டு வந்துடுவாங்க. அதனாலதான் திமுகவும் மற்ற கட்சிகளோட கையெழுத்து போட்டுட்டு கடைசியா எங்களை கூப்பிடுறாங்க. இன்று இரவோ அல்லது நாளையோ அண்ணியார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விடுவார்' என்கின்றனர்.
தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் வரை கொடுக்க திமுக தயாராக இருப்பதாகவும், ஆனாலும் இயன்றவரை பேசி 9 இல் முடிக்க முயற்சிப்பதாகவும் அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.














