`10 தொகுதிகள்' - திமுக - தேமுதிக இடையே ஒப்பந்தமானது தொகுதிப் பங்கீடு!
அண்ணாமலை கொடுத்த `லிஸ்ட்' - பரபரத்த பியூஷ் கோயல் உடனான சந்திப்பு!
அ.தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'எந்தெந்த தொகுதிகளை அ.தி.மு.க-விடம் கேட்டுப் பெறுவது, அதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது' என்ற ஆலோசனை கமலாலயத்தில் சூடு பறக்கிறது.
நேற்று நள்ளிரவு 12.40 மணிவரையில் கமலாலயத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பா.ஜ.க-வின் சீனியர் தலைவர்கள் பலரிடமும் கருத்துக் கேட்டுள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
இந்தச்சூழலில், இன்று காலை பியூஷ் கோயலைச் சந்தித்திருக்கும் அண்ணாமலை, தன்னுடைய ஆதரவாளர்கள் சிலருக்கு சீட் கேட்டு ஒரு லிஸ்ட்டைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள். சென்னை ஐ.டி.சி சோழா ஹோட்டலில் நடந்திருக்கும் அந்தச் சந்திப்பில், கூட்டணி நிலவரம், தேர்தல் வியூகம் குறித்தெல்லாம் இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

அந்தச் சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மாநில நிர்வாகிகள் சிலர், "மாநிலத் தலைவர் பொறுப்புக்கு அண்ணாமலை வந்தவுடன், ஒவ்வொரு மாவட்டத் தலைவர்களிடமும் பா.ஜ.க-வுக்கு ஆதரவான தொகுதிகளைப் பட்டியல் எடுக்கச் சொன்னார். பட்டியல் எடுக்கப்பட்ட பிறகு, அந்தத் தொகுதிகளைக் குறிவைத்து வேலைப் பார்க்க நிர்வாகிகளையும் களமிறக்கினார்.
அதன்படி, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பல நிர்வாகிகளும் அவரவர் தொகுதிகளில் கடுமையாக பணி செய்திருக்கிறார்கள். திருப்பூர் தெற்கு, வாசுதேவநல்லூர், புதுக்கோட்டை, அரவக்குறிச்சி, சூலூர், பல்லடம், பழனி என்று பல தொகுதிகளிலும் பா.ஜ.க-வுக்கென வாக்குவங்கியை உருவாக்கியுள்ளனர். மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்ட பின்னரும்கூட, அந்தத் தொகுதிகளிலெல்லாம் பா.ஜ.க ஆக்டிவ்வாகவே இருந்து வருகிறது.
அந்தத் தொகுதிகளின் பட்டியலை பியூஷ் கோயலிடம் அளித்திருக்கும் அண்ணாமலை, 'பா.ஜ.க வலுவாக இருக்கும் இந்தத் தொகுதிகளை அ.தி.மு.க-விடம் கேட்டுப்பெற வேண்டும்' என்று கூறியிருக்கிறார். அதோடு, அதில் சில தொகுதிகளுக்கு தன்னுடைய ஆதரவாளர்களை வேட்பாளர்களாக களமிறக்கவும் கோரிக்கை விடுத்திருக்கிறார். அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறியிருக்கும் பியூஷ் கோயல், சீட் பங்கீடு தொடர்பாக அண்ணாமலையின் கருத்தைக் கேட்டபோது, தனக்குள்ள மாற்றுக் கருத்துக்களைக் கூறியிருக்கிறார் அண்ணாமலை.
அதாவது, 'கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், 11.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது பா.ஜ.க. அதேசமயம், அ.தி.மு.க-வுக்கு 23 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அதன்படி தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டிருந்தால், பா.ஜ.க-வுக்கு சுமார் 70 தொகுதிகளுக்கு மேல் இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும். ஆனால், 'கடந்த முறை 20 கொடுத்தோம். இப்போது ஏழு தொகுதிகள் கூடுதலாக 27 தொகுதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று எடப்பாடி சொன்னதை நாம் ஏற்றுக் கொண்டுவிட்டோம். கட்டமைப்பே இல்லாத காங்கிரஸ் கட்சி, தி.மு.க-விடமிருந்து 28 தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டையும் பெற்றுவிட்டது. மத்தியில் நாம் ஆட்சியில் இருந்தும்கூட, அ.தி.மு.க-வுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் செய்தும்கூட, காங்கிரஸ் பெற்ற எண்ணிக்கையைவிட ஒரு தொகுதி கூடுதலாக நம்மால் பெற முடியவில்லை.

இப்போது பெற்றிருக்கும் 27 தொகுதிகளிலும் தலா 80,000 வாக்குகளைப் பெற்று, அத்தனை தொகுதிகளிலும் வெற்றிப்பெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை. அப்படியே சாத்தியப்படுத்தினாலும், நமக்கு மொத்தமாக 21 லட்சம் வாக்குகளே கிடைக்கும். வழக்கமாக, தமிழகத்தில் 75 சதவிகிதம் வாக்குகளே பதிவாகின்றன. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், பதிவாகப்போவது என்னவோ 4.24 கோடி வாக்குகள்தான். அதனோடு 21 லட்சம் வாக்குகளை ஒப்பிடும்போது, நமக்கு கிடைக்கப்போவது வெறும் ஐந்து சதவிகித வாக்குகள்தான். 11 சதவிகிதமாக இருந்த பா.ஜ.க-வின் வாக்கு, ஐந்து சதவிகிதமாகக் குறைந்துவிடும். இந்தப் புதுக்கணக்கை வைத்துத்தான், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு சீட் ஒதுக்க முற்படுவார் எடப்பாடி பழனிசாமி. வளர்ந்துவரும் கட்சியை முடக்கும் செயலாகவே இந்த சீட் பங்கீடு அமைந்திருக்கிறது' என்று பியூஷிடம் விளக்கியிருக்கிறார் அண்ணாமலை.

ஆனால், இந்த முடிவு டெல்லியில் அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பில் எடுக்கப்பட்டதால், அதில் தலையிட பியூஷ் கோயல் விரும்பவில்லை. அண்ணாமலையை சிங்காநல்லூர் அல்லது சூலூரில் களமிறக்குவது குறித்து கட்சி மேலிடம் பரிசீலிக்கிறது. அதுதொடர்பாக கருத்துக் கேட்டபோது, 'தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் நான் இல்லை. தலைமை என்ன சொல்கிறதோ, அதைச் செய்கிறேன்' என்றுவிட்டுப் புறப்பட்டிருக்கிறார் அண்ணாமலை" என்றனர் விரிவாக.
இந்த பரபரப்பான சூழலில், நாளை சென்னை வரவிருக்கிறார் பா.ஜ.க-வின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ். ஒரு சிலருக்கு சீட் இன்னும் உறுதியாகாத சூழல் நிலவுகிறது. அதையெல்லாம் சந்தோஷ் பஞ்சாயத்துப் பேசி சரிசெய்வார் என்கின்றன பா.ஜ.க வட்டாரங்கள்.!














