நாங்குநேரி இரட்டைக் கொலை: `முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?' - ...
Iran Vs Israel: "என் சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி"- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெகிழ்ச்சி!
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்துவரும் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் நெதன்யாகு இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், நேற்று ஈரான் நடத்திய தாக்குதலில் பெய்ட் ஷெமேஷ் பகுதியில் உள்ள ஜெப ஆலயம் சிதைந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அந்த இடிபாடுகளைப் பார்வையிட பாதுகாப்பு படையினருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றதற்கும், உண்மைக்காகக் குரல் கொடுத்ததற்கும் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி இஸ்ரேல் மக்களால் பெரிதும் போற்றப்படுபவர். அவருடனான உரையாடல் ஆக்கபூர்வமாக அமைந்தது. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டின் கொடுங்கோன்மை ஆட்சியை தூக்கியெறியும் காலம் நெருங்கிவிட்டது. அந்த மாற்றம் நிகழும்போது, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானிய மக்களுக்குத் துணையாக இருக்கும்." என்றார்.
இதற்கிடையில், நேற்று மாலை ஈரான் மீண்டும் பல ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. இதில் மூன்று ஏவுகணைகள் பாதிப்பை ஏற்படுத்தும் முன்னரே வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாகத் தடுத்து அழிக்கப்பட்டன.
தொடர் அச்சுறுத்தல் காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மொபைல் போன்களுக்கு அனுப்பப்படும் எச்சரிக்கை செய்தியைப் பின்பற்றி, மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மறு உத்தரவு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.











