நான் Pradeep Ranganathan Fan! - Child Artist Haswinth Interview | Siragadikka Aa...
IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர் கப்பலை அமெரிக்கா நீர் மூழ்கி ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது. இந்தப் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் கடற்படையினருக்கு இந்தியா மற்றும் இலங்கை மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் அளித்துள்ளன.
ஈரானின் 'ஐரிஸ் டெனா' கப்பல் அமெரிக்காவால் தாக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான 'ஐரிஸ் லவன்', தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகக் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புக அனுமதி கேட்டிருந்தது.

பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் விடுத்த இந்த கோரிக்கையை ஏற்று, மார்ச் 1 அன்று இந்தியா அனுமதி வழங்கியது. மார்ச் 4 அன்று கொச்சி வந்தடைந்த இந்தக் கப்பலில் இருந்த 183 மாலுமிகளும் தற்போது கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படை முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே ஈரானியக் கப்பல் அமெரிக்காவால் தாக்கப்பட்ட நிலையில், காயமடைந்த 32 மாலுமிகளை இலங்கை மீட்டது. மேலும், 'ஐரிஸ் புஷெர்' (IRIS Bushehr) என்ற மற்றொரு ஈரானியக் கப்பலும் எஞ்சின் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி கேட்டது. இலங்கை அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அதிலிருந்த 219 மாலுமிகள் கொழும்பு அருகே உள்ள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்துப் பேசிய இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க, ``ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது. நடுநிலை வகிக்கும் அதே வேளையில், உயிர்களைக் காப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யத் அப்பாஸ் அரக்சி, இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ``எங்கள் மாலுமிகளை மீட்ட இலங்கை அரசுக்கு நன்றி. எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி, 2000 மைல்களுக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் இருந்த ஒரு கப்பலை அமெரிக்கா தாக்கியிருப்பது ஒரு குற்றம். இது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் எதிர்கொள்ளப்படும். " எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
















