செய்தி சேனல்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் வெளியிட தடை - மத்திய அரசின் திடீர் அதிரடி
அழிந்து வரும் நாட்டு கழுதைகளை வளர்க்க மத்திய அரசு ரூ.50 லட்சம் மானியம்! - முழு விவரம்!
தேசிய கால்நடை வளர்ப்பு திட்டத்தில், கழுதை வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைத் தொழில்களைத் தொடங்க இந்திய அரசு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது. கழுதை வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைத் தொழில்களில் ஈடுபட நினைக்கும் தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், கழுதைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற விலங்குகளுக்கான பண்ணைகளை அமைக்க தனிநபர்கள் மற்றும் விவசாய குழுக்கள், சுய உதவிக் குழுக்கள் ரூ. 50 லட்சம் வரை மானியமாகப் பெறலாம்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், கழுதை போன்ற விலங்குகள் வளர்ப்புக்கான மொத்த திட்டச் செலவில் 50 சதவீதத்தை மானியமாக பெற முடியும். இந்த மானியத் தொகை அதிகபட்சமாக 50 லட்சம்வரை வழங்கப்படும்.

தனிநபர்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிரிவு 8வது பிரிவின் கீழ் வரும் நிறுவனங்கள் எனப் பலதரப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த உதவியைப் பெறத் தகுதியுடையவர்கள்.
தகுதிகள், நிபந்தனைகள்
இத்திட்டத்தின் கீழ் ஒரு கழுதை இனப்பெருக்கப் பண்ணை அமைக்க, குறைந்தது 50 பெண் கழுதைகள் மற்றும் 5 ஆண் கழுதைகள் இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் மானியம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும். திட்டத்திற்கான வங்கி கடனுக்கு ஒப்புதல் வழங்கியவுடன் முதல் தவணை வழங்கப்படும். பண்ணை அமைக்கும் பணி முடிந்து, அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு இரண்டாவது தவணை வழங்கப்படும்.
உள்நாட்டு நாட்டுப்புற கால்நடை வகைகளைப் பாதுகாக்கும் முயற்சியாக, உள்நாட்டு இனங்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும். இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அதனை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2019-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கால்நடை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் 1.23 லட்சம் கழுதைகள் மட்டுமே இருந்தன. இது 2012-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் 60 சதவீதம் குறைவு ஆகும்.
முன்பு போக்குவரத்து மற்றும் கட்டுமானப் பணிகளில் கழுதைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இயந்திரங்களின் வருகையால் அவற்றின் தேவை குறைந்து, எண்ணிக்கையும் சுருங்கிவிட்டது. எனவே நிதிச் சலுகைகள் மூலம் இந்த விலங்குகளைப் பாதுகாக்க அரசு முடிவு செய்துள்ளது.




















