மழை வெள்ளத்தில் சென்ற கார்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய கணவர், இழுத்துச்செல்லப்...
Jana Nayagan: "விஜய் சாரை எம்.ஜி.ஆர் கூப்பிடும் காட்சிக்கு டப் செய்தது நான்தான்; ஆனா.!" - டி.எஸ்.கே
நடிகரான பிறகும் மிமிக்ரியால் நம்மைத் தொடர்ந்து எண்டர்டெயின் செய்து வருகிறார் டி.எஸ்.கே. கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்தில் எம்.ஜி.ஆர். பேசுவது போல இடம்பெற்றிருக்கும் காட்சிகளுக்கு, அவரைப் போல மிமிக்ரி டப் செய்தது இவர்தான்.

'ஜனநாயகன்' படத்தில் விஜய்யை, எம்.ஜி.ஆர், 'தங்கமே தளபதி' என அழைத்து சாட்டையைக் கொடுப்பது போல ஒரு காட்சி இருக்கும்.
இந்தக் காட்சிக்கும் எம்.ஜி.ஆர். போல மிமிக்ரி செய்து டப் செய்தவரும் இவர்தான். 'ஜனநாயகன்' குறித்தும், இவருடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும் டி.எஸ்.கே-விடம் பேசினோம்.
பேசத் தொடங்கியவர், "‘வா வாத்தியார்’ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்வில், எம்.ஜி.ஆர். குரலில் கார்த்தி சார் மற்றும் சத்யராஜ் சாருடன் உரையாடுவது போன்ற ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
"எம்.ஜி.ஆர். போல யார் பேசுவார்கள்?" என்று யோசித்தபோது, என் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதைச் செய்து முடித்த மறுநாளே நலன் குமாரசாமி சார் என்னை அழைத்தார். ‘வா வாத்தியார்’ படத்தில் ஒரு முக்கியமான காட்சிக்காகக் கார்த்தி சாருடன் எம்.ஜி.ஆர். பேசுவது போல டப் செய்து கொடுத்தேன்.

இந்தப் படத்திற்கு நான்தான் டப் செய்திருக்கிறேன் என்பதை அறிந்து, 'ஜனநாயகன்' படத்தில் ஒரு காட்சிக்கும் என்னை டப் செய்யக் கூப்பிட்டார்கள்.
திரையரங்கில் படம் பார்க்கும்போதுதான் அந்த ‘தங்கமே தளபதி’ என்ற ஒரு வார்த்தை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது புரிந்தது.
இதை என் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பிறகே, "நாங்கள் ஏ.ஐ. குரல் என்று நினைத்தோம், நீங்கள்தான் பண்ணினீர்களா?" எனப் பலரும் ஆச்சரியத்துடன் கருத்துகளைத் தெரிவித்தனர்.
தற்போது ‘லப்பர் பந்து’ படத்திற்குப் பிறகு சில படங்களில் நடித்து வருகிறேன். சமீபத்தில் மலையாளத்தில் ப்ரித்விராஜ் சாருடன் 'விளையாத் புத்தா' படத்தில் நடித்திருந்தேன். இப்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சார் - தனுஷ் சார் காம்போவில் உருவாகும் ‘ஓம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறேன்.
இப்படி முழுநேர நடிகராக மாறிய பிறகும், இந்த மாதிரியான வாய்ஸ் ஓவர் எனக்கு நல்ல அங்கீகாரத்தைத் தருகிறது.

உதாரணத்திற்கு, ‘ஃபர்ஸி’ வெப் சீரிஸில் விஜய் சேதுபதி அண்ணனுக்குத் தமிழ் மற்றும் தெலுங்கில் நான்தான் டப்பிங் பேசினேன்.
அவரே எனக்கு போன் செய்து, "ரொம்ப நெருக்கமானவர்களைத் தவிர வேறு யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை, அதுவே உனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி" என்று பாராட்டினார்.
அதேபோல், '96' படத்தின் ஒரு காட்சிக்கு நானே சொந்தமாக டப்பிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால், எந்தப் பிரபலத்தின் குரலில் பேசும்போதும் ஒரு பயம் இருக்கவே செய்யும். ஏனெனில், 100% யாராலும் மற்றொருவரின் குரலை அச்சுப்பிசகாமல் மாற்றிவிட முடியாது. சின்னத் தவறு நடந்தாலும் விமர்சனங்கள் வரும்.
இருந்தாலும், சிலரின் குரல்களை மிகவும் நம்பிக்கையுடன் செய்வேன். அதேபோல், பொன்ராம் சாரின் 'கொம்பு சீவி' படத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மதன்பாபு சாரால் பேச முடியாதபோது நான்தான் டப் செய்தேன்.
ரோபோ சங்கர் அண்ணனுக்கும் ஒரு படத்தில் பேசியிருக்கிறேன்." என்றவர், "இயக்குநர் அ. வினோத் சாரும் நானும் ஒரே ஜிம்மில்தான் வொர்க் அவுட் செய்கிறோம்.

'வலிமை' படத்திற்காக நான் ஒரு கதாபாத்திரத்திற்கு ஆடிஷன் செய்யப்பட்டேன். அப்போதிருந்து அவரை எனக்குத் தெரியும். ஜிம்மில் சந்தித்தபோது, என்னுடைய நடிப்பைப் பாராட்டினார். பிறகு நான்தான் 'ஜனநாயகன்' படத்தில் எம்.ஜி.ஆர். குரல் கொடுத்த விஷயத்தைக் கூறினேன்.
ஏனென்றால், நான் உதவி இயக்குநர் ஒருவர் மூலமாகச் சென்றுதான் டப்பிங் பேசினேன். நான்தான் அந்த சீனுக்கு டப்பிங் கொடுத்ததை அவரிடம் சொன்னதும், "அந்த போட்டோ சீனுக்குப் பேசியதா? ரொம்ப தேங்க்ஸ்" என்றார்.
விஜய் சாரைச் சந்திக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால், முதல்வரான பிறகு ரொம்ப பிஸியாக இருக்கிறார். அதற்கான வாய்ப்பு அமைந்தால் நன்றாக இருக்கும். மேலும் சிலர் "ஒரு சின்ன வார்த்தைதானே பேசின, அதுக்கு ஏன் இப்படி பண்ற?" எனச் சொல்கிறார்கள்.
ஆனால், விஜய் சாரின் கடைசிப் படத்தில் எம்.ஜி.ஆர். குரல் வழியாக அவருடன் ஒரு காட்சியில் இடம்பெற்றது எனக்கு வாழ்நாள் சாதனைதான்." என்றார் உற்சாகத்துடன்.


















