விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 23 பேர் பலி, 6 பேர் காயம்!
Mohanlal: "நாளை நானும் மறைந்துவிடுவேன்; அதுதான் யதார்த்தம்!" - மோகன்லால் உருக்கம்
நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், மலையாளத்தில் வெளிவரும் 'கிருஹலட்சுமி' இதழுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் தன்னுடன் பணியாற்றி மறைந்த சக கலைஞர்களின் மறைவு அவருக்குள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி மோகன்லால் பகிர்ந்திருக்கிறார்.
"என்னுடைய பழைய படங்களின் சில காட்சிகளைப் பார்க்கும்போது என் மனம் சோகத்தில் மூழ்கிவிடும். அதற்குக் காரணம், அந்த பிரேம்களில் என்னுடன் நின்றிருந்த பல நடிகர்கள் இன்று உயிரோடு இல்லை என்பதுதான்.
அந்த சோகம் என்னை ஆட்கொள்கிறது. ஆனால் துக்கப்படுவதால் என்ன பயன்? நாளை நானும் மறைந்துவிடுவேன். அதுதான் யதார்த்தம்.
இந்த உண்மையை முழுமையாகத் தெரிந்தே நான் இப்போதும் வருந்துகிறேன். கண்ணீர் என்பது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது. உலகம் எத்தனையோ தத்துவங்களைக் கண்டுவிட்டது.

ஆனாலும் மனிதன் இன்னும் அழுதுகொண்டுதான் இருக்கிறான். நானும் ஒரு சாதாரண மனிதன்தானே! என் தாய், தந்தையர், சகோதரர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டார்கள் என்பது எனக்குப் பெரும் துயரத்தைத் தருகிறது.
ஆனாலும், நான் ஒருபோதும் தனிமையாக உணர்ந்ததில்லை. கண்களை மூடினால் அவர்கள் எனக்குள்ளேயே இருக்கிறார்கள். என்னால் அவர்களைத் தொடவோ பார்க்கவோ முடியாது, அவ்வளவுதான்" என உருக்கமாகப் பேசியிருக்கிறார்.


















