நிகழ மறுத்த அற்புதம்! : மிகவும் வருத்தத்தை ஏற்படுத்திய `காந்தா’ திரைப்படம்
RBI: ரிசர்வ் வங்கியில் 650 காலிப்பணியிடங்கள்; சென்னையில் மட்டும் 52 இடங்கள் - ரூ.78,640 வரை சம்பளம்!
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ரிசர்வ் வங்கி, இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனமாகும். பண நோட்டுகள் வெளியிடுவதை ஒழுங்குமுறைப்படுத்துதல், இந்தியாவின் நிதியாதாரத்தில் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இருப்புகளை வைத்துக்கொள்ளுதல், நாணயத்தையும் கடன்முறையையும் நாட்டு முன்னேற்றத்திற்கு உரியவகையில் இயக்குதல் போன்ற முக்கியப் பணிகளை இந்த நிறுவனம் செய்கிறது. இந்தியா முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்குகிறது.
தற்போது இந்த நிறுவனம் 650 உதவியாளர் (Assistant’) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனுமொரு பட்டப்படிப்பை முடித்துள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்தமுள்ள 650 இடங்களில் பொதுப்பிரிவினருக்கு 346 இடங்களும்,Ews பிரிவினருக்கு 58 இடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 99 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 110 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 37 இடங்களும், ஒதுக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு 70 இடங்கள் உண்டு.

காலியிட விவரங்கள்
* அகமதாபாத் - 20 * பெங்களூரு - 24 * போபால் - 30 * புவனேஸ்வர் - 18 * சண்டிகர் - 20 * சென்னை - 53 * கவுகாத்தி - 36 * ஹைதராபாத் - 11 * ஜெய்ப்பூர் - 11 * ஜம்மு - 10 * கான்பூர் & லக்னோ - 50 * கொல்கத்தா - 29 * மும்பை - 249 * நாக்பூர் - 17 * டெல்லி - 49 * பாட்னா - 17 * திருவனந்தபுரம் - 06
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
* வயது வரம்பு 2026.02.01 தேதியின்படி, 20 முதல் 28 வரை இருக்கலாம்.
* 02.02.1998 முன்னர் பிறந்தவராக இருக்கக்கூடாது.
* ஒபிசி பிரிவினருக்கு 31 வரை, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 33 வரை, மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 வருடங்கள் வரை வயதுத் தளர்வு உள்ளன.
*முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அதிகபடியாக 50 வயது வரை தளர்வு உண்டு.
* கணவரை இழந்த, விவகாரத்து பெற்ற, பிரிந்து வாழும் பெண்களுக்கு 35 வயது வரை தளர்வு உள்ளது.
* ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மதிப்பெண் வரம்பு இல்லை. தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
* குறிப்பிட்ட மாநில அலுவலகங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், அந்த மாநிலத்தின் மொழியை பேச, எழுதத் தெரிந்தவராக இருக்கவேண்டும். உதாரணமாக சென்னை அலுவலகத்துக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு எப்படி நடக்கும்?
மொத்தம் மூன்று நிலைகளில் தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு ஆங்கிலம், நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கி 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆங்கிலம், நுண்ணறிவு, பொது விழிப்புணர்வு, கணினி பயன்பாடு ஆகியவை உள்ளடக்கிய 200 மதிப்பெண்களுக்கான முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மொழி தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். அனைத்திலும் தேர்வாகும் நபர்கள் இறுதி பட்டியலில் இடம்பெறுவார்கள்.
எவ்வளவு சம்பளம்?
இந்தப்பணிக்கு ரூ.29,000 முதல் ரூ.78,640 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு மாதத்திற்கு ரூ.58,514 வழங்கப்படும். HRA தனியாக வழங்கப்படும்.
எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினர், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான பயிற்சியை பெற ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பிக்கலாம்.

எங்கெல்லாம் தேர்வு எழுதலாம்?
சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில், திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் முதல்நிலைத் தேர்வு நடக்கும்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், சேலம், புதுச்சேரி ஆகிய இடங்களில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://opportunities.rbi.org.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.450. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தினால் போதும்.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
பிப்ரவரி 16-ம் தேதியே விண்ணப்பிக்கும் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் பிழைகள் இருந்தால் திருத்துவதற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும். முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 11-ம் தேதியும், முதன்மை தேர்வு ஜூன் 7-ம் தேதியும் நடைபெறும்.
கூடுதல் விவரங்கள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ள
https://opportunities.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=4912 என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
பயன்படுத்திக் கொள்வோம்... தேவையானவர்களுக்கு பகிர்வோம்!















