"நெல்லை சாம்பார்... ஒவ்வொரு வீட்டிலும் தனிச்சுவை" - சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச...
Rishab Shetty: "உன்னிடமுள்ள இவையே என்னை வியக்க வைக்கின்றன!" - மனைவி குறித்து நெகிழும் ரிஷப் ஷெட்டி
கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், 'காந்தாரா' திரைப்படத்தின் மூலம் இந்தியளவில் புகழ் பெற்றவருமான ரிஷப் ஷெட்டி, தனது மனைவி பிரகதி ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரகதியின் சிறுவயது புகைப்படங்கள் முதல், ஒரு தாயாக, ஒரு தொழில்முறை கலைஞராக அவர் பரிணமித்த தருணங்கள் வரை உள்ளடக்கிய ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் கன்னடத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ``உன்னிடமுள்ள அபூர்வமான மன உறுதி, தாய்மையின் அன்பு, தொழிலில் காட்டும் கவனம் மற்றும் அனைத்தையும் ஒரே நேரத்தில் கையாளும் விதம் என்னை எப்போதும் வியக்க வைக்கின்றன.
இந்த வண்ணமயமான வாழ்க்கையில் ஒரு ஒளியாகத் திகழும் நீ, இன்னும் பல வெற்றிகளையும் புகழையும் பெற வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் பிரகதி!" எனத் தெரிவித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி மற்றும் பிரகதி ஷெட்டி இருவரும் ஒரு திரைப்பட விழாவில் சந்தித்து காதல் வயப்பட்டனர். இருப்பினும், அந்தச் சமயத்தில் ரிஷப் ஷெட்டியின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருந்தது.
அதனால் பிரகதியின் குடும்பத்தினர் திருமணத்திற்குத் தயங்கினர். ஆனால், தங்களது காதலில் உறுதியாக இருந்த இந்த ஜோடி, 2017-ல் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு ரன்வித் என்ற மகனும், ராத்யா என்ற மகளும் உள்ளனர்.
மென்பொருள் பொறியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரகதி, பின்னர் ஆடை வடிவமைப்பாளராக மாறி ரிஷப் ஷெட்டியின் படங்களுக்குப் பணியாற்றத் தொடங்கினார்.
சமீபத்தில் 2025-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'காந்தாரா சாப்டர் 1' (Kantara Chapter: 1) படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரகதி ஷெட்டியின் பிறந்தநாளுக்கு ரிஷப் ஷெட்டியின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
















