பாமக: ``இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது" - கட்சி விவகாரம் குறித்து நீதிபதிக...
SIR: ``குழப்பத்துக்கெல்லாம் முதல்வர்தாங்க காரணம்!'' - சாடும் பாஜக; பதிலடி திமுக!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ரிப்பன் பில்டிங்கில் சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்திருந்தது.

கூட்டத்தின் முடிவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,
"தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் வாக்காளர்களின் பெயரும் சென்னையில் தொகுதிக்கு 40000 வாக்காளர்களின் பெயரும் நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
20 வருடமாக இந்த வாக்காளர்களின் பெயரில் வாக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போதுதான் நீக்கியிருக்கிறார்கள்." எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு கலந்துகொண்டார். அவர் பேசுகையில், 'ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து SIR பெயரில் மோசடி செய்து வாக்குத்திருட்டில் ஈடுபடுகிறது.
நேற்று வரை 99% பேருக்கு விண்ணப்பம் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், 60% பேரின் விவரங்களை மட்டும்தான் இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள்.
திமுக கொடுத்த நெருக்கடியால்தான் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்திருக்கிறார்கள்.

ஒரு மாதமாகியும் SIR குறித்து அதிகாரிகளுக்கே தெளிவு இல்லை. ஒரு வாரமாக மழை பெய்து மக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்த ஒரு வார இழப்பை எப்படி ஈடு செய்யப்போகிறார்கள்?
திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லை.
இடப்பெயர்வு மற்றும் இறந்தவர்களுக்கான விண்ணப்பத்தை கொடுப்பதில் BLO -க்களே குழம்புகிறார்கள்.' என்றார்.
``வட நாட்டவரை தமிழ்நாட்டுக்குள் புகுத்த பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து சதி செய்கிறது.
திமுக அரசுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த நடைமுறையை செய்திருக்கின்றனர்.'' என காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட நவாஸ் என்பவர் பேசியிருந்தார்.

பா.ஜ.க சார்பில் கராத்தே தியாகராஜன் கூட்டத்துக்கு வந்திருந்தார். அவர், "SIR குழப்பத்துக்கே மயிலாப்பூரை சேர்ந்த ஒரு வாக்காளர்தான் காரணம். அந்த விண்ணப்பத்தை காண்பித்து குழப்பமாக இருக்கிறது என வீடியோ போட்ட பிறகுதான் மக்களுக்கு குழப்பமே ஏற்பட்டது. அவர்தான் முதலமைச்சர்.
அவருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என தேர்தல் அலுவலரிடம் முறையிட்டேன்" என்றார்.

















