ஏற்றத்தில் Gold & Silver | IT Sector Down | Anthropic AI Plugin | IPS Finance 42...
TVK:``பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான்" - மீண்டும் அதிமுக-வை சீண்டிய தவெக!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்தார். அப்போது த.வெ.க தலைவர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ``கரூர் சம்பவம் நடந்து 72 நாள்கள் கழித்து தான் அவர் வெளியில் வந்தார். வெளியே வந்தால் தான் விஜய்க்கு விஷயம் தெரியும். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை. ஒரு கூட்டணி கட்சிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்று கூட அவருக்கு தெரியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமைத் தாங்கும் என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டார்கள். ஒரு முறையாவது முதலில் செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பேச சொல்லுங்கள்." என்றார்.

இந்த நிலையில், த.வெ.க இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தமிழகத்தில் தற்போதுள்ள கூட்டணி அ.தி.மு.க-வால் உருவாக்கப்பட்டதல்ல. அது பா.ஜ.க-வால் வடிவமைக்கப்பட்டது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், ஒரு தனியார் விடுதியில்தான் நடந்தன. கட்சித் தலைவர்கள் அனைவரும் அவரைத்தான் சந்தித்தார்கள். யாரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கூட்டணி அமைக்கவில்லை.
செங்கல்பட்டில் நடந்த பிரதமர் மோடியின் கூட்டமே இதற்குச் சாட்சி. அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளிவிட்டு பா.ஜ.க-வே அனைத்தையும் முன்னெடுத்து வருகிறது. இது தெளிவாக பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான்.
ஜெயலலிதாவை திமுக அரசு பல வழிகளில் ஒடுக்கியது. அவர் மீது போடப்பட்ட பல வழக்குகள் பொய்யானவை. அவரது வீட்டில் இருந்தவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சில தவறுகள் நடந்திருக்கலாம், ஆனால் ஜெயலலிதா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதுதான் எங்களைப் போன்ற லட்சக்கணக்கான மக்களின் கருத்து.

ஒன்றரை ஆண்டுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை 'தவழ்ந்து போய் காலில் விழுந்தவர். இரட்டைக் கொலை செய்தவர்' என கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, இன்று அதே நபரை 'முதல்வர் வேட்பாளர்' என முன்னிறுத்துவது கேவலமான அரசியல். இப்படி தினமும் ஒரு பேச்சு பேசும் நபர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.
தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றுவதையே வேலையாகக் கொண்டுள்ளன. கடந்த முறை தி.மு.க அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. தற்போது அ.தி.மு.க அள்ளி வீசும் வாக்குறுதிகளையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை.
ஆனால், எங்கள் தலைவர் விஜய் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னையையும் ஆய்வு செய்து வருகிறார். அவர் அறிவிக்கப்போகும் வாக்குறுதிகள் நூறு சதவிகிதம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எங்களது தேர்தல் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கான காவல்துறையின் அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தலைவர் விஜய் இதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்பார்வையிட்டு வருகிறார்." என்றார்.














