`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் ம...
India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01
எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’
இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'.
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
இந்தியா – அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது பல அடுக்குகளில் கவலையை ஏற்படுத்துகிறது. இந்திய அரசே இதை மக்களிடமும் நாடாளுமன்றத்திலும் தெளிவாக விளக்காமல், இன்னொரு நாட்டின் தலைவர் அறிவிப்பது இந்திய ஜனநாயக மரபுகளுக்கு முரணானதாகும். இது ஒரு வர்த்தக உடன்பாடு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தையும் வெளிநாட்டு கொள்கை திசையையும் தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக பார்க்கப்பட வேண்டும்.

இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வரலாற்றில், “அணிசேரா கொள்கை” (Non-Alignment Policy) மிக முக்கியமான இடத்தை பெற்றது. இந்த கொள்கை சுதந்திரத்துக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசின் காலத்திலிருந்து இந்தியாவின் அடிப்படை வெளிநாட்டு கொள்கையாக பின்பற்றப்பட்டது.
எந்த ஒரு பெரிய சக்தி கூட்டணியுடனும் இணங்காமல், உலக நாடுகளுடன் சமநிலையுடன் உறவு பேணுவதன் மூலம் இந்தியா தனது இறையாண்மையையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் உறுதியாக நிலைநிறுத்தியது. இதன் மூலம் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் போன்ற சக்திகளின் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் கூட இந்தியா தனது சொந்த பாதையை தேர்வு செய்யும் வலிமையை பெற்றது.
அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை
ஆனால் இன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணிசேரா கொள்கை கொள்கை மெதுவாக கைவிடப்பட்டு, அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை உருவாகி வருகிறது. இந்த சாய்வு இந்தியாவின் நீண்டகால நலனுக்கும் இறையாண்மைக்கும் உகந்ததா என்பது தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.
ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசியல் அணுகுமுறை உலகத்திற்கே தெரிந்த ஒன்று. அவர் சர்வதேச அமைப்புகள் மற்றும் கூட்டணிகளுக்கு கூட முழு நம்பிக்கை காட்டாதவர்.

நேட்டோ போன்ற பாதுகாப்பு கூட்டமைப்புகளை விமர்சித்ததும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் இருந்து விலகியதும் அவரது தீவிர வலதுசாரி தேசியவாத அரசியலின் வெளிப்பாடுகளாகும்.
பொருளாதாரத்தில் “முதலில் அமெரிக்கா” என்ற கொள்கையை முன்வைத்து, மற்ற நாடுகளின் சந்தைகளை தங்களுக்காக திறக்க வைக்கும் அணுகுமுறையே அவரது அரசியல் நடைமுறையாக இருந்தது. இத்தகைய தலைமை இந்திய தொழில்களையும் விவசாயத்தையும் வளர்க்கும் என்ற நம்பிக்கை உறுதியற்றதாகவே தெரிகிறது.
இன்றைய உலகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகம் பல இடங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. வெனிசுவேலாவில் அரசியல் தலையீடுகள், ஈரான்மீது கடுமையான பொருளாதார தடைகள், கிரீன்லாண்ட் குறித்து கூட அமெரிக்காவின் விரிவாக்க கனவுகள், இவை அனைத்தும் அமெரிக்காவின் புதிய காலனிய மனப்பான்மையின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன. இத்தகைய சக்தியுடன் மிக நெருக்கமாக இணைவது இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபுகளை மறைமுகமாக ஒப்புக்கொள்வதற்கு சமமானதாகும்.
ரஷ்யாவின் பங்களிப்பு..!
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க அல்லது நிறுத்த சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முடிவாகும். பல தசாப்தங்களாக ரஷ்யா இந்தியாவின் நம்பகமான நண்பனாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் ரஷ்யாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் கிடைத்த ஆற்றல் வளங்கள் இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் பெரும் பங்கு வகித்தன.
‘மேக் இன் இந்தியா’ - அரசியல் விளம்பரமாக மாறும்!
இப்போது அந்த உறவை புறக்கணித்து அதிக விலையில் அமெரிக்க ஆற்றல் வளங்களை சார்ந்துகொள்வது, நேரடியாக இந்திய மக்களின் வாழ்க்கைச் செலவை உயர்த்தும். எரிபொருள் விலை உயர்வு என்பது போக்குவரத்து செலவுகள் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.
அதே நேரத்தில், அமெரிக்கப் பொருட்களுக்கு சுங்க வரிகள் பெருமளவு குறைக்கப்படுகின்றன என்ற தகவல்கள் இந்திய விவசாயிகளுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அமெரிக்காவின் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடுவது இந்திய உற்பத்தியாளர்களால் சாத்தியமல்ல. இது இந்திய சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குத் திறந்துவிடும் அபாயத்தை உருவாக்குகிறது. ‘மேக் இன் இந்தியா’ என்ற முழக்கம் இதனால் வெறும் அரசியல் விளம்பரமாக மாறும் நிலை உருவாகலாம்.

இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் சில NRI ஆர்எஸ்எஸ் காரர்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. அமெரிக்காவில் வாழும் சில குழுக்கள் தங்களது சொந்த பொருளாதார நலன்களுக்காக இந்திய அரசின் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது இந்திய மக்களின் நலனை மையமாகக் கொண்ட ஒப்பந்தமாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் லாப நோக்கத்தில் உருவான முடிவாக மாறியுள்ளதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இந்தியாவின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள் அனைத்தும் தேசிய நலனையும் இறையாண்மையையும் மையமாக வைத்தே எடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு உலக சக்தியின் அழுத்தத்திற்கும் தலைவணங்குவது இந்தியாவின் மரபல்ல. அணிசேரா கொள்கை இந்தியாவை உலக அரங்கில் மரியாதைக்குரிய நாடாக மாற்றியது.
முடிவாக, இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் என்பது சாதாரண வணிக உடன்பாடு அல்ல. இது இந்தியாவின் பொருளாதார இறையாண்மை, வெளிநாட்டு கொள்கை, சுதந்திரம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் ஒரு முக்கிய திருப்பமாகும்.
அமெரிக்காவின் உடனடி நலன்களுக்கு ஏற்ற முடிவுகள் இந்திய மக்களின் நீண்டகால நலனுக்கு எதிராக மாறிவிடக் கூடாது.
இந்தியா தனது இறையாண்மை மரபையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தேசிய நலனே எந்த ஒப்பந்தத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும், அதுவே இந்தியாவின் வலிமையும் எதிர்காலமும்.!















