இன்னும் ஒரே ஒரு மாதம் தான், 'வேற லெவல்' ஆகப்போகும் இந்திய ரூபாய் - அமெரிக்க வங்க...
கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும் சோகம்
கோவை மாவட்டம், மதுக்கரை பகுதி நவக்கரை அருகே பெண் காட்டு யானை உயிரிழந்திருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

மருத்துவக் குழுவினர் யானைக்குப் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில் யானையின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை என்று தெரியவந்தது. மேலும் இறந்த பெண் யானை கருவுற்ற நிலையில் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
அந்த யானையின் வயிற்றில் இருந்து 13 மாதங்களான சிசு எனக் கண்டறியப்பட்டது. இதே யானைதான் கடந்த வாரம் குப்பனூர் பகுதியில் சேற்றில் சிக்கியது. உயிரிழந்த யானைக்குச் சுமார் 50 வயதிருக்கும். மேலும் யானையின் உடல் உறுப்புகள் பல செயலிழந்துவிட்டன.

அதனால்தான் கடந்த சில வாரங்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளது. வயிற்றில் குட்டியுடன் பெண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு – கேரளா எல்லையில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையாறு அருகே உள்ள வட்டப்பாறை பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் யஷ்வந்த்பூர் ரயில் வேகமாகச் சென்றுள்ளது.

அப்போது அந்த வழியே ஒரு யானைக் கூட்டம் தண்டவாளத்தைக் கடந்துள்ளது. இதில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி ஆண் யானை மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.


















