சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வ...
Vikram1: இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ - விண்ணில் பாய்ந்தது!
இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ (Skyroot Aerospace) ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனது முதல் Orbital ராக்கெட்டான 'விக்ரம்-1' இன்று விண்ணில் செலுத்தியிருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'வருகை' என்று பொருள்படும் சமஸ்கிருதச் சொல்லான "ஆகமன்" (Aagaman) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலப் பயணம், இன்று (ஜூலை 18) காலை 12:05 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாயின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள 'விக்ரம்-1', ஸ்கைரூட் நிறுவனத்தின் விண்வெளிப் பயணத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2022 நவம்பரில் இந்நிறுவனம் Prarambh என்ற திட்டத்தின் கீழ் 'விக்ரம்-எஸ்' என்ற சப்-ஆர்பிட்டல் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்தது. இதன் மூலம் விண்கலத்தை விண்ணில் செலுத்திய இந்தியாவின் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்ற ஸ்கைரூட், இந்திய ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பால் நம்பகமான ஏவுகணைகளை உருவாக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியது.
விண்ணில் நிலைநிறுத்தக்கூடிய திறன்கொண்ட ஒரு தனியார் ராக்கெட் மூலம், உலக அரங்கில் இந்தியாவின் வருகையை பறைசாற்றுவதே இந்த 'ஆகமன்' திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தச் சோதனை ஓட்டத்தின் போது விக்ரம்-1 ராக்கெட்டின் செயல்திறன் மற்றும் அதன் முக்கிய தொழில்நுட்பங்கள் காற்றில் எவ்வாறு செயல்படுகின்றன என்பது துல்லியமாகக் கண்காணிக்கப்படும். இந்தத் தரவுகள் நிறுவனத்தின் அடுத்தடுத்த விண்வெளித் திட்டங்களை நோக்கி நகர்வதற்கு மிக முக்கியப் பங்காற்றும் என ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்புமிக்க நிகழ்வையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ``இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய எல்லை! இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட ஏவுகணையான விக்ரம்-1-ன் முதல் ஆர்பிட்டல் ஏவுதலை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இன்று மேற்கொள்ளவுள்ளது. நான்கு நிலைகளைக் கொண்ட ராக்கெட், விரைவான மற்றும் தேவைக்கேற்ற ஏவுதல் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் நமது இளைஞர்களின் திறமை, மன உறுதி மற்றும் தொழில் முனைவோர் ஆர்வத்தை எடுத்துக் காட்டுகிறது. மேலும், விண்வெளித் துறையில் நாம் கொண்டு வந்த சீர்திருத்தங்கள், கண்டுபிடிப்புகளுக்கும் புதிய தொழில் வாய்ப்புகளுக்கும் எவ்வாறு வழிவகுத்துள்ளன என்பதையும் இது உணர்த்துகிறது.
இந்த ஏவுதல் வெற்றிகரமாக அமைய ஒட்டுமொத்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். விக்ரம்-1 மிக உயரமாகப் பறந்து, வரலாறு படைத்து, புதிய தலைமுறை கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்கமளிக்கட்டும். இந்தியர்கள் அனைவரும், குறிப்பாக எனது இளம் நண்பர்கள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தைக் கண்டு களிப்பதோடு, ஸ்கைரூட் குழுவிற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

















