சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வ...
'ஆங்கிலம் தெரியாமல் இருந்தபோது என்னை கேலி செய்தனர்; ஆனால்..!'- கசப்பான சம்பவத்தை பகிர்ந்த பாக்யஸ்ரீ
நடிகர் அகில் அக்கினேனி நடித்திருக்கும் 'லெனின்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இவர் தமிழில் 'காந்தா' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'லெனின்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றிருக்கிறார் பாக்யஸ்ரீ போர்ஸ். அப்போது தனது சிறுவயதில் நடந்த கசப்பான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரிலுள்ள ஒரு மராத்தி வழிப் பள்ளியில் படித்த பாக்யஸ்ரீ, அவரது தந்தையின் வேலை காரணமாக குடும்பத்துடன் நைஜீரியாவிற்கு இடம்பெயர்ந்திருக்கிறார்.
அங்கு சென்றபோது அவருக்கு ஆங்கிலம் தெரியாமல் மராத்தி மற்றும் இந்தி மட்டுமே தெரிந்திருக்கிறது. இதனால் அங்கிருந்த பிற இந்திய வம்சாவளி குழந்தைகள் பாக்யஸ்ரீ போர்ஸுக்கு ஆங்கிலம் தெரியாததால் கிண்டல் செய்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாணவர்களிடம் பகிர்ந்துகொண்ட அவர், "அந்த சமயத்தில் எனக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. எனக்கு மராத்தி மற்றும் இந்தி மட்டும்தான் தெரியும்.
என்னைச் சுற்றியிருந்த பிற இந்திய வம்சாவளி குழந்தைகள் எல்லாரும், 'இவளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை' என்று பேசத் தொடங்கினார்கள். அதனால் இயல்பாகவே என்னை கேலி செய்ய ஆரம்பித்தார்கள். நான் மிகவும் அப்பாவியாக இருந்தேன்.
எனக்கு மொழி தெரியவில்லை என்பது மட்டும்தான் அதற்கு ஒரே காரணம். இதற்கெல்லாம் ஒரே வழி, நம்மைச் சுற்றி எழும் அந்த எதிர்மறையான விமர்சனங்களை நிராகரித்துவிட்டு, நம்முடைய இலக்கில் மட்டும் கவனம் செலுத்துவதுதான்.

அது நிச்சயம் கடினமாக இருக்கும், வலிக்கும்; ஆனால் அந்த வலிதான் உங்களை அடுத்த கட்டத்திற்கு வளரத் தூண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அன்று அவர்கள் என் ஆங்கிலத்தைக் கேலி செய்யாமல் இருந்திருந்தால், இன்று எனது ஆங்கிலம் இந்த அளவுக்கு சிறப்பாக இருந்திருக்காது.
நான் இந்த விஷயத்தை அப்படிப்பட்ட ஒரு நேர்மறையான கோணத்தில்தான் பார்க்கிறேன். நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு எதிர்மறையான விஷயமும், நம்மிடம் இருக்கும் நேர்மறையான சக்தியை இன்னும் வலுவாக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று உத்வேகமாக பேசியிருக்கிறார்.



.jpg)













