"அடுத்த 6 மாதம் பிரதமருக்கு தமிழ்நாடு சாப்பாடும், கலாசாரமும்தான் பிடிக்கும்" - க...
"அடுத்த 6 மாதம் பிரதமருக்கு தமிழ்நாடு சாப்பாடும், கலாசாரமும்தான் பிடிக்கும்" - கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த இலங்கை எம்பி ஜீவன் தொண்டமான் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசியபோது, "பீகார் முதல்வராக நிதீஷ் குமார் எவ்வளவு காலம் நீடிப்பார் என்பது காலம்தான் பதில் சொல்லும்.

தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனப் பொதுவானதைப் பேசுவது கொள்கை கிடையாது. அவருடைய ஒவ்வொரு விஷயத்திலும் தங்களது கொள்கையை விளக்குவார்கள் என நம்புகிறேன்.
SIR திட்டத்தை ஒரு வருடத்திற்கு முன்னரே நடத்தியிருக்க வேண்டும். இதில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இணையச் சேவை இல்லாததால் பல இடங்களில் SIR படிவங்களைப் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. குறுகிய காலத்தில் இப்பணியைச் செயல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும். 30 நாட்களுக்குள் வாக்காளர்கள் நீக்கல் மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பது செய்ய முடியுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
SIR பணியினை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு இதுகுறித்தான போதிய பயிற்சி இல்லை, மக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க அவர்களால் முடியவில்லை.
தமிழகத்தில் 2026 இல் சட்டமன்றத் தேர்தல் வருவது தேர்தல் ஆணையத்திற்கு முன்கூட்டியே தெரிந்தும், போதிய கால அவகாசம் இன்றி வெளிப்படைத்தன்மை இல்லாமல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

பிரதமர் மோடி பீகார் பிரசாரத்தின் போது பீகாரிகளை தமிழர்கள் தாக்குவதாகக் கூறினார். இப்போது தமிழகம் வரும்போது தமிழ் கற்று கொள்ளவில்லை என்று கூறுகிறார். அடுத்த 6 மாதத்திற்கு தமிழ்நாடு, கேரளா சாப்பாடுதான் பிடிக்கும், கலாசாரம்தான் அவருக்குப் பிடிக்கும் என்று கூறுவார்.
என்னுடைய புரிதலின்படி தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் வெற்றி அடையும், பிற இடங்களில் தோல்வியைத்தான் தழுவும். ஆக்ராவில் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது.
எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை. ஆனால், மத்திய அரசு தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை ஒதுக்காமல் பாரபட்சமாகச் செயல்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
பிரதமர் மோடி பீகாரில் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் திட்டங்களைக் கொண்டு வருவதாகக் கூறினார், அது எந்தக் காலத்தில் வரப்போகிறது எனப் பார்ப்போம், மோடி கூறுவதை சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மோடி தேர்தல் வரும்போது அந்த மாநில மொழியினை நேசிப்பதாகவும், அந்தக் கலாசாரத்தை நேசிப்பதாகவும், நிதி தருவதாகவும், கூறுவார், ஆனால், உண்மையில் ஒன்றும் இருக்காது.
பீகார் தேர்தல் முடிவுக்கும், தமிழ்நாட்டுத் தேர்தலுக்கும், அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் உள்ள சம்பந்தம்தான், வேறு எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஒவ்வொரு மாநில தேர்தலிலும், கூட்டணி மற்றும் அரசியல் சூழ்நிலை அடிப்படையில்தான் முடிவுகள் இருக்கும். தமிழகத்தில் மும்முனை மற்றும் அதற்கு மேற்பட்ட கூட்டணிகள் போட்டியிட்டால் திமுக கூட்டணி எளிதில் வெற்றி பெறும்" என்றார்.














