`அதற்கு நான் பதில் சொல்ல முடியாது; பேரவைத் தலைவர் என்ற முறையில்...' - சபாநாயகர் ...
`அதற்கு நான் பதில் சொல்ல முடியாது; பேரவைத் தலைவர் என்ற முறையில்...' - சபாநாயகர் சொல்வது என்ன?
அ.தி.மு.க-வுக்குள் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டால் கட்சி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. இந்த அரசியல் மோதல்களுக்கு இடையே, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரும் திடீரென சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்துத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதோடு, தமிழ்நாடு தலைமை செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் நேரில் சந்தித்து த.வெ.க-வில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ``மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் திருமதி கே. மரகதம் குமரவேல், பேரந்துரை தொகுதி உறுப்பினர் திரு எஸ். ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி உறுப்பினர் திருமதி பி. சத்யாபாமா ஆகிய மூன்று பேரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக முறைப்படி கடிதம் அளித்துள்ளனர். சட்டமன்ற பேரவை விதி 21-ன் படி, பதவி விலக விரும்பும் உறுப்பினர், அதற்கான படிவத்தில் தன் கைப்பட எழுதி, கையொப்பமிட்டு, நேரில் வந்து அளிக்க வேண்டும் என்பது விதியாகும். இந்த மூன்று உறுப்பினர்களும் தனித்தனியாக நேரில் வந்து, தங்களது கைப்பட எழுதிய கடிதத்தை அளித்ததால், அவர்களின் ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பேரவை விதிகளின்படி, பதவி விலகல் கடிதத்தில் எந்தக் காரணமும் குறிப்பிடத் தேவையில்லை. "இன்று முதல் இப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்" என்ற வாசகம் இருந்தால் போதுமானது. தபால் மூலம் வரும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த ராஜினாமா விவரங்கள் முறைப்படி தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் அதுகுறித்த மற்ற அறிவிப்புகளை வெளியிடும். கட்சி மாறி ஓட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. விதிகளின்படி உரிய நேரத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொறடா பதவி தொடர்பாக இரண்டு தரப்பிலிருந்தும் கடிதங்கள் வந்துள்ளன. "நாங்கள் தான் கொறடா" என்று இருதரப்பும் கூறுவதால், அதனை ஆய்வு செய்யக் கால அவகாசம் தேவைப்படுகிறது.
சபாநாயகர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க எந்தக் காலக்கெடுவும் இல்லை. எனவே, நான் சட்டத்திற்கும் விதிகளுக்கும் உட்பட்டு உரிய நேரத்தில் முடிவு எடுப்பேன். இன்று மேலும் 5 எம்.எல்.ஏ-க்கள் கடிதம் கொடுத்துள்ளனர். அது மன்னிப்புக் கடிதம் போன்ற விவரங்களைக் கொண்டது. அக்கடிதங்களை முழுமையாகப் படித்துப் பார்த்து, விதிகளின்படி ஆராய்ந்த பின்னரே முடிவு அறிவிக்கப்படும். மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்யும்போது அவர்களுக்கு சபாநாயகர் ஏன் ஆலோசனை வழங்கக் கூடாது? என்ற கேள்வி சரியானதல்ல. அப்படி ஆலோசனை வழங்குவது சபாநாயகரின் வேலை அல்ல.
எனக்கு வரும் கடிதம் முறைப்படி உள்ளதா என்று பார்த்து முடிவெடுப்பதே எனது வேலை. வெளியில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தோ, ஊடகங்களின் சந்தேகங்கள் குறித்தோ ஆராய்வதும் சபாநாயகரின் பணி அல்ல. தலைமைச் செயலகம் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்கு என்னால் பதில்சொல்ல முடியாது. சட்டமன்றப் பேரவைத் தலைவர் என்ற முறையில் எனது அலுவலகம் சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே என்னால் பதிலளிக்க முடியும்." எனக் குறிப்பிட்டார்.












