Penguin: 'வாழா என் வாழ்வை வாழவே' - வைரலாகும் ஒற்றை பென்குயின்; பின்னணி என்ன தெரி...
அதிகரித்து வரும் சாமியானா பந்தல்; நலிந்து வரும் தென்னந்தட்டி தொழில் - தொழிலாளர்களின் கோரிக்கை என்ன?
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள விஜயாபதி ஊராட்சிக்குபட்டது தில்லைவனம் தோப்பு கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னந்தட்டி பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னந்தோப்புகளில் உள்ள ஓலைகளை கொள்முதல் செய்து அதனை காய வைத்து தண்ணீரில் போட்டு பக்குவப்படுத்தி அதை தென்னந்தட்டிகளாக பின்னுகிறார்கள். தென்னந்தட்டி பின்னும் தொழிலாளர்களுக்கு ஒரு தட்டிக்கு ரூ.2 கூலியாக வழங்கப்படுகிறது.

அதன்படி நாள் ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூலியாக பெறுகின்றனர். இப்பகுதியில் பின்னப்படும் தென்னந்தட்டிகள் தரமாகவும், உறுதியாகவும் இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தற்போது விற்பனை குறைந்துள்ளதாக கவலை தெரிவிக்கிறார்கள் தொழிலாளர்கள்.
இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக வீடு கட்டுபவர்கள், வீட்டின் மேற்கூரைகளில் ஆஸ்பெஸ்டாக்ஸ் ஷீட், தகர ஷீட், கூலிங் ஷீட் ஆகியவை போடப்படுவதுதான் என்கிறார்கள். திருமணம், கோயில் திருவிழா உள்ளட்டவைகளுக்குக்கூட தென்னந்தட்டி பந்தல் அமைப்பதற்கு பதிலாக சாமியானா அல்லது தகர மேற்கூரை அமைக்கிறார்கள்.

இதுகுறித்து தென்னந்தட்டி பின்னும் பெண் தொழிலாளி வேலம்மாளிடம் பேசினோம், “நாங்கள் தலைமுறை, தலைமுறையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தென்னை ஒலைகளை கொள்முதல் செய்து வருவது ஆண்களின் வேலை. அதை பக்குவப்படுத்தி பின்னிக் கொடுப்பது எங்களின் வேலை. ஒரு காலத்தில் இங்கு பின்னப்படும் தென்னந்தெட்டிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆர்டர்களுக்காக முன்பணம் கொடுத்து தென்னந்தட்டி பின்னச் சொல்லுவது வழக்கத்தில் இருந்தது.
இதன் மவுசால் இரவு, பகலாக தட்டி பின்னுவோம். ஒன்றரை அடி அகலமும், ஏழு அடி நீளமும் 25 எண்ணிக்கையும் கொண்ட ஒரு கட்டு, மழைக்காலங்களில் ரூ.100-க்கும், கோடை காலங்களில் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில நேரங்களில் தென்னந்தட்டிகள் விற்பனையாகாமல் தேங்கியும் கிடக்கும். இதனை பாதுகாப்பதற்கு எந்த வசதியும் இல்லை.

தென்னந்தட்டிகள் சில நேரங்களில் வீணாகி விடுவதால் அரசு இத்தொழிலை புத்துயிரூட்டும் வகையில் எங்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கிட வேண்டும். மழை மற்றும் வெயில்காலங்களில் தென்னந்தட்டி கட்டுகளை பாதுகாக்க சமுதாய நலக்கூடங்கள் அமைத்துத்தர வேண்டும். அத்துடன் பாரம்பர்யமான தென்னந்தட்டி பந்தல்கள அமைக்க அரசு ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.



















