வயலில் அழுகும் தக்காளி; உண்மையில் குப்பையா? உள்ளே இருக்கும் பெரிய பிசினஸ் - விவச...
`அரசுக்கு திமுக பஞ்சபாண்டவர்களாக துணை நிற்கும்!' – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம்
புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், ``மாநில அந்தஸ்துக்காக அரசு குரல் கொடுக்கும்போது, பஞ்சபாண்டவர்கள் போல தி.மு.க எப்போதும் துணை நிற்கும். தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு முதலமைச்சர்களை அழைப்பது வழக்கம்.
ஆனால் சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடந்த அந்த மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் அழைப்பு வந்தது. அதனால் இரண்டு உரைகள் தயாரிக்கும் நிலை ஏற்பட்டது. கவர்னரின் உரையில்தான் அதிக கருத்துக்கள் இடம்பெறும். முதலமைச்சருக்கு இருக்காது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர்தான் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும். கவர்னருக்கு சில பொறுப்புகள் உள்ளன. ஆனால் அமைச்சர்களை நியமிக்க முதலமைச்சர்தான் பரிந்துரை செய்ய வேண்டும். அதை கவர்னர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுமதிக்க வேண்டும். அதேபோல அமைச்சர்களுக்கான துறைகளை, முதலமைச்சர் பரிந்துரை செய்தவுடன் கவர்னர் ஒப்புதல் அளித்து வெளியிட வேண்டும்.
ஆனால் தற்போதைய கவர்னர் அப்படி ஒப்புதல் தரவில்லை. அதனால் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து வலியுறுத்தினோம். அதன் பின்னர்தான் கவர்னர் மாளிகையில் வைத்து அமைச்சர்களுக்கு என்ன இலாகா வழங்கலாம் என்று பேச்சுவார்த்தை நடக்கிறது.
சபாநாயகரை தேர்வு செய்வது யார்? தற்காலிக சபாநாயகரை 100 நாள்கள் எந்த மாநிலத்திலாவது வைத்துள்ளார்களா? அதனால் புதுவைக்கு சபாநாயகர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். மாநிலம் பாழாய்ப் போகிறது என்ற வேதனையில்தான் சில விஷயங்களை கூறுகிறேன். புதுச்சேரியில் இரட்டை நிர்வாகம் நடக்கிறது.
புதுவையை யார் ஆள்வது? இது இப்படியே சென்றால் பாழாகிவிடும். இதையெல்லாம் யார் பேசுவது? முதலமைச்சருக்கு அதிகாரம் பெற மாநில அந்தஸ்து வேண்டும் என்பது அல்ல, அதற்கு பதிலாக யூனியன் பிரதேச சட்ட விதிகளின்படி முதலமைச்சர் அதிகாரத்தை அதிகரிக்கலாம்.

பல நேரங்களில் நாம் மாநிலமா... யூனியன் பிரதேசமா… என்று தெரியவில்லை. அவர்களுக்கு தேவைப்படும்போது மத்திய அரசு நம்மை யூனியனாக கருதுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் பட்சத்தில், புதுச்சேரிக்கு நியமன எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்த திருத்தம் கொண்டு வருவார்கள். அதனால் சட்டப்பேரவைக்கும், முதலமைச்சருக்கும் அதிகாரம் கிடைக்க பல திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்" என்றார்.














