ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு' மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட...
அறிவாலயம் வராத ம.நீ.ம - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி?
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தினர் அறிவாலயம் பக்கமே வராதாதது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க - ம.நீ.ம இடையே என்ன நடக்கிறதென விசாரித்தோம்.

பிப்ரவரி 23-ம் தேதி இந்திய முஸ்லீம் லீக்கும் மனிதநேய மக்கள் கட்சியும் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தொடங்கிய நிலையில், பிப்ரவரி 27-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் 28-ம் தேதி காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவர்களுடன் டி.ஆர் பாலு, கே.என் நேரு தலைமையிலான குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. வருகின்ற மார்ச் 2-ம் தேதி வி.சி.க-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தைக்கு வருவதாகவோ, அழைப்பு விடுக்கப்பட்டதாகவே எந்த தகவலும் இல்லை.
நம்மிடம் பேசிய ம.நீ.ம மாநில நிர்வாகிகள் சிலர், "முதலில் பிப்ரவரி 23-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த அறிவாலயம் செல்வதாக இருந்தோம். எத்தணை தொகுதிகள் கேட்பது, எந்தெந்த தொகுதிகள் கேட்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எங்கள் தலைவரிடம் ஆலோசனை பெற முடியவில்லை.

அடுத்ததாக பிப்ரவரி 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடக்கும் எனச் கட்சி மட்டத்தில் பேசப்பட்டது. ஆனால் அதையும் தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லிவிட்டார்கள்" என்றனர்.
தி.மு.க - ம.நீ.ம இடையே என்னதான் நடக்கிறது என விசாரித்தோம், அதுகுறித்துப் பேசும் தலைமைக்கு நெருக்கமானவர்கள் "எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் எங்கள் தலைவர் கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகிய மூவரும்தான் தொகுதி குறித்து பேசுவார்கள்.
அப்படித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட் கையெழுத்தானது. 2026 பொறுத்தவரையில் 6 சீட் கேட்கிறது ம.நீ.ம, தி.மு.க 3 தொகுதியிலேயே நிற்கிறது. அதிலொரு தெளிவு கிடைத்தபிறகுதான் தொகுதி பங்கீட்டுக்கு செல்ல இருக்கிறோம். கூடுதல் சீட்டுக்காக தனிச்சின்னத்தை விட்டுக்கொடுக்கவும் எங்கள் தலைவர் தயாராக இருக்கிறார்" என்றனர்

இதுகுறித்து விளக்கம் கேட்க ம.நீ.ம செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம் "தி.மு.க-வுடன் மிகுந்த இணக்கமாக இருக்கிறார் எங்கள் தலைவர். எத்தணை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவிலேயே பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்போம்" என்றார்.



















