ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் - இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங...
அழிவின் விளிம்பில் வங்குநரி, சமநிலை காக்க `வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம்' - என்ன சிறப்பு?
நாட்டிலேயே முதன்முறையாக குள்ள நரிகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்விற்கென சிறப்பு மையம் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மணக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இது 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என்ற தகவலோடும், குள்ள நரிக்கென தனியாக- அதுவும் நாட்டிலே முதன்முறையாக - அமைக்கப்பட்டுள்ளது என்ற ஆச்சரியத்தோடும் அங்கு பார்வையிட சென்றோம்.
அண்மையில், 17.11.2025 அன்று “வனமும் வாழ்வும்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் சான்றிதழ் பயிற்சி அளிக்க சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 25 தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆசிரியர்களை கொண்டு, 17.11.2025 மற்றும் 18.11.2025 ஆகிய இரண்டு நாள் பயிற்சி முகாம் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்தின.
“வனமும் வாழ்வும்” திட்ட நோக்கம்
தமிழ்நாடு முழுவதும் மாவட்டத்திற்கு 25 ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒரு ஆசிரியர் 20 மாணவர்கள் வீதம் வனம் மற்றும் வன உயிரினங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி 17.11.2025 அன்று அந்தந்த மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இந்த திட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலரால் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுமார் 20,000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் விழிப்புணர்வு சான்றிதழ் பயிற்சியை முன்னெடுத்துள்ளது நம் தமிழ்நாடு அரசு.

வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் ஏன் தேவை?
சேலம் மாவட்டத்தில் நாட்டிலேயே முதன்முறையாக வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் அமைந்துள்ளது.
ஏனெனில், சேலம் மாவட்டத்தில் பரவலாக காணப்படும் மற்றும் வாழப்பாடி போன்ற பகுதிகளில் துன்புறுத்தப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ள வங்குநரியை பாதுகாக்கவும், அதை பற்றி பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஆய்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
வங்குநரி ஆய்வு மையம் இரண்டு ஆண்டுகளாக என்ன செய்தது?
முக்கியமான ஆய்வு பகுதியாக, வங்குநரி இருந்தாலும், மேலும் அழிவின் விளிம்பில் உள்ள முள்ளெலி, எறும்புத்தின்னி மற்றும் அழிந்து வரும் பறவையினங்கள் பற்றியும் ஆய்வுகள் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இந்த மையம் மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் அழிவின் விளிம்பிலுள்ள சிங்கவால் குரங்கு, சென்னை முள்ளெலி, வரிக்கழுதைப்புலி மற்றும் கூம்புத்தலை மஹ்சீர் மீன் ஆகிய உயிரினங்களை பாதுகாப்பதற்காக ரூ. 1 கோடி செலவில் ஒரு முன்னோடி திட்டத்தைத் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வு மையத்தில் என்ன சிறப்பு?
வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையத்தை பார்வையிட்டோம். அங்கு நரிகளின் வகைகள், அதன் வாழ்விட அமைப்புகள், எலும்புக் கூடு அமைப்பு மற்றும் இயற்கை சூழலில் காண்பது போன்ற தத்ரூபமான மாதிரிகள் ஆகியவை உள்ளடங்கிய நவீன புரொஜெக்டர் வசதியுடன், அதுகுறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன.
மேலும், மணக்காடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வங்குநரி மற்றும் விலங்குகள்–தாவரங்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகள், சாதாரண பள்ளி வகுப்புகள் போலவே தனியாக நடத்தப்படுகின்றன என வன உயிரின ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.





வனமும் வாழ்வும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் பேசிய போது, இந்த பயிற்சி எங்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியதாகவும், 20 மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சான்றிதழ் பெற வைப்பதோடு நின்றுவிடாமல், அந்த 20 மாணவர்களுக்கு கிடைத்த விழிப்புணர்வை அவர்கள் மூலம் இன்னும் பல மாணவர்கள் அறியும்வண்ணம் பரப்புவோம் என்றும், இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த வனத்துறைக்கு நன்றியையும் தெரிவித்தனர்.
வனத்துறை அலுவலரிடம் கேட்ட போது, இது அரசின் புதிய முயற்சி, நிச்சயம் பல மாணவர்கள் இதன் மூலம் விழிப்புணர்வு பெற்று சமூக சமநிலைக்கான தங்களின் பங்களிப்பை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.
“வன உயிரினங்கள் மனிதரின் மதிப்புகளின் ஓர் அங்கம்; ஆகவே வன உயிரினங்களை பாதுகாப்போம்.”
















