கர்நாடக வனத்துறை தூப்பாக்கிச் சூடு: "காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!" - மு....
ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை அறிதல்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!
அரசு தொடக்க, நடுநிலை, அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை அறிய பள்ளிக் கல்வித்துறையிலிருந்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.
ஆசிரியர்கள் அனைவரின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்படுதல் குறித்து பல்வேறு கோரிக்கைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் வரப்பெறுவதால், அதனை அறிவதற்குச் சில நெறிமுறைகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அதில், "புதிதாக நேரடி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களின் அனைத்து வகைக் கல்விச் சான்றுகளையும் உரிய கல்வி நிறுவனம் / பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் / அரசுத் தேர்வுகள் இயக்கக அலுவலருக்கு அனுப்பி உண்மைத் தன்மை அறியப்படுதல் வேண்டும்.
இந்த உண்மைத் தன்மை அறிதல் என்பது பணியில் சேர்ந்த பின்பு தகுதிகாண் பருவம் முடிக்கும் நாளிலேயே அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட வேண்டும்.
பணிபுரிந்து வரும் இதர தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் பயின்று பெற்றுள்ள கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் அனைத்துக் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரம் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதைப் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளுக்கு ஓராண்டுக்கு முன்னரே அனைத்துப் பதிவுகளும் சரியாக உள்ளனவா என பணிப்பதிவேடு பராமரித்து வரும் அலுவலர்கள் சரியாகக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் உண்மைத் தன்மை அறியப்பட்ட பின்பு மீண்டும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கோ பல்கலைக்கழகத்திற்கோ உண்மைத் தன்மை அறிய அனுப்பத் தேவையில்லை.

உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரம் அனைத்தும் உரிய காலநேரத்தில் பெறப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் 10 ஆண்டுகள் கழித்துத் தேர்வுநிலை அல்லது 20 ஆண்டுகள் கழித்துச் சிறப்பு நிலை அனுமதிக்கும்போதும், மேலும் ஓய்வுபெறும் காலம் வரை மேற்கண்டவாறு உண்மைத் தன்மை அறியப்படுவதற்காக அலைக்கழிக்கப்படுகின்றனர் என பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
மேலும், பல ஆசிரியர்கள் ஓய்வுபெறும் நாள் வரை கல்விச் சான்றுகள் உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரம் பெறப்படாமல், ஓய்வுபெறும் நாளில் தனியரின் கல்விச் சான்று உண்மைத் தன்மையற்றது என அறிக்கை பெறப்பட்டுள்ளது என்றும், அதனடிப்படையில் அவ்வாசிரியரைப் பணியிலிருந்து ஓய்வுபெற வட்டாரக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்களால் அனுமதி மறுக்கப்படுவதும், ஓய்வூதியப் பணப்பலன்கள் நிறுத்திவைப்பதும் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு அதனால் அவ்வாசிரியர்கள் நீதிமன்றம் சென்று துறைக்கு எதிரான தீர்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
எனவே, இந்நிகழ்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு நியமன அலுவலர்கள் / ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் / பணிப்பதிவேடு பராமரிக்கும் அலுவலர்கள் இனி வருங்காலங்களில் இதுபோன்ற புகார்களுக்கு இடமளிக்காத வகையில் உடனடியாக உரிய காலநேரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றினை உண்மைத் தன்மை அறியும் பொருட்டு உரிய அலுவலர் / நிறுவனத்திற்கு அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரத்தின் நகலினைச் சார்ந்த ஆசிரியருக்குச் சார்பு செய்வதுடன் அவ்விவரத்தினைப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
அத்துடன் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் உண்மைத் தன்மையற்றது / போலியானது என அறிக்கை ஏதும் பெறப்பட்டால் அவ்வாசிரியர் மீது உடனடியாகக் காவல்துறையின் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் அதன் தொடர்ச்சியாகத் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது," எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

















