கர்நாடக வனத்துறை தூப்பாக்கிச் சூடு: "காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!" - மு....
"அன்பைப் பரப்புவதே என்னுடைய புரட்சி!" - விமர்சனங்களுக்கு பதிலடி தந்த 'சிக்மா' பட நடிகை ஃபரியா
டோலிவுட்டில் 'ஜதி ரத்னாலு' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபரியா அப்துல்லா. தற்போது இவர் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஹைதராபாத்தில் நடந்த பாரம்பரிய போனாலு திருவிழாவில் கலந்துகொண்டதற்காகச் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கும் ட்ரோல்களுக்கும் உள்ளாகியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10 அன்று, ஹைதராபாத்தில் உள்ள திருக்கோயில் ஒன்றில் ஃபரியா, தலையில் 'போனம்' சுமந்து, தப்பு மேள இசைக்கு நடனமாடி நேர்த்திக்கடனைச் செலுத்தினார்.
இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட அவர் ஒரு இந்து மதப் பண்டிகையில் கலந்துகொண்டிருக்கிறார் என விமர்சித்தனர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து ஃபரியா அப்துல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார்.
அவர், "என் தந்தை சஞ்சய் அப்துல்லா இந்து மதத்தில் பிறந்து, இஸ்லாத்தின் கோட்பாடுகள் பிடித்துப்போய் விருப்பப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்.
ஒரு மதத்தின் நல்ல விஷயங்களை நேசித்து அதை ஏற்றுக்கொண்ட ஒரு தந்தையின் வழிகாட்டுதலில் வளர்ந்த எனக்கு, இஸ்லாத்தின் நல்ல பக்கங்கள் மட்டுமே கற்றுத்தரப்பட்டன.
என்னை வெறுப்பவர்கள், நான் தவறான பாதையில் செல்வதாக நினைப்பவர்கள் அல்லது என்னை 'காஃபிர்' என்று அழைப்பவர்கள் எதைச் சொன்னாலும் நான் உங்களுக்காக நல்லதையே பிரார்த்திக்கிறேன்.
நான் மரங்கள், பாறைகள், வண்ணத்துப்பூச்சிகள் எனச் சுற்றியுள்ள அனைத்து உயிர்களிலும் இறைத் தன்மையைக் காண்கிறேன்.
வெறுப்புக்குப் பதிலாக அன்பைப் பரப்புவதே என்னுடைய புரட்சி. என் மீது வெறுப்பைக் கொட்டுபவர்களுக்கும் நான் அன்பை மட்டுமே திருப்பித் தருவேன்," என விளக்கமளித்திருக்கிறார்.

















