"வெற்றியாளர்களை விட பங்கேற்பாளர்கள் தான் முக்கியம்; நரேஷ் ஐயர் கூட.!"- ஏ.ஆர் ரஹ்...
இந்தியா - அமெரிக்கா வரி: "கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார்" - காங்கிரஸ் விமர்சனம்
அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது.
மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கும் பிரதமர் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் எனவும் தெரித்திருக்கிறார். தற்போது உலக அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``வாஷிங்டன் டி.சி-யிலிருந்துதான் 'ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த சமீபத்திய தகவல்களையும் வாஷிங்டனில் இருந்தே அவர் அறிவிக்கிறார்.
முழு விவரங்களும் இன்னும் வராத நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தையும் வாஷிங்டனில் இருந்தே அவரே அறிவித்திருக்கிறார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பிரதமர் மோடி மீது அதிபர் ட்ரம்பிற்கு ஒரு பிடி இருப்பதாகத் தெரிகிறது. இப்போது ட்ரம்புடன் வழக்கமான கட்டிப்பிடிக்கும் நிகழ்வுகளில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்கட்டும், அவருடன் சேர்ந்து காணப்படுவதற்கே இப்போது மோடி வெட்கப்படுகிறார்.
கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. நிச்சயமாக இது ஒப்பந்தங்களின் தந்தை என்று சொல்லுமளவிற்கு ஒரு சிறந்த ஒப்பந்தமாக இருக்க முடியாது" என்றார்.
அமெரிக்காவின் இந்தியத் தூதர் செர்ஜியோ கோர், ட்ரம்ப், மோடியுடன் பேசியதாகவும், இது குறித்த அறிவிப்புகளுக்குக் காத்திருங்கள் என்றும் அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய ஜெய்ராம் ரமேஷ், ``இந்தியா அரசின் நடவடிக்கைகள் குறித்து அதிபர் ட்ரம்ப்போ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அமெரிக்க அதிகாரிகளோ சொல்லித்தான் இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது அதுவே ஒரு வழக்கமாகிவிட்டது போல் தெரிகிறது" என்றார்.

















