மகாராஷ்டிரா: தேர்தலில் போட்டியிட தடையாக இருந்த 6 வயது மகளை கொன்ற கொடூர தந்தை - எ...
இந்தியா - அமெரிக்கா இடையே மெகா வர்த்தக ஒப்பந்தம்: ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி!
அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் ட்ரம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமாக இது கருதப்படுகிறது. இதற்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும் எனவும் தெரியவருகிறது.

மேலும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 'மேட் இன் இந்தியா' பொருட்களுக்கான பரஸ்பர வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அமெரிக்கா உடனடியாகக் குறைத்துள்ளது. இதற்கு ஈடாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தடைகளை நீக்கி, வரியை பூஜ்ஜியமாக (Zero Tariff) குறைக்க இந்தியா முன்வந்துள்ளது.
இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ``எனது மிகச்சிறந்த நண்பர் பிரதமர் மோடியுடன் பேசியது கௌரவம். அவர் உலக அளவில் மதிக்கப்படும் ஒரு வலிமையான தலைவர். மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது. எரிசக்தி, விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் மோடி,``இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 18%-ஆகக் குறைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு பெரும் ஜனநாயக நாடுகளின் இந்த இணக்கம், இருநாடுகளின் வளர்ச்சிக்கு வித்திடும். உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமைத்துவம் மிகவும் அவசியம் ."எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
அமெரிக்காவில் இந்தியப் பொருட்கள் மீதான வரி 18% ஆகக் குறைப்பு.
அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல்.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி; அமெரிக்காவிடம் அதிக இறக்குமதி.
மார்ச் 2025 முதல் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்து, புதிய வர்த்தக அத்தியாயம் தொடக்கம்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை வாஷிங்டன் செல்லவிருக்கும் நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















