`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி ...
Lok Sabha: `நிச்சயம் அதை சொல்வேன்; அந்த வரிக்குத்தான் மோடியும்' - ராகுல் பேச்சும், பாஜக எதிர்ப்பும்!
இன்று (பிப்.2) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.-பியுமான ராகுல் காந்தி, 2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதி வெளியிடப்படாதப் புத்தகம் குறித்த ஒரு பத்திரிகைக் கட்டுரையை கையில் ஏந்தியபடி பேசத் தொடங்கியிருக்கிறார்.
இது பாஜக தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராகுல் காந்தி அந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டத் தொடங்கிய உடனேயே, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறுக்கிட்டு, வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுவது சபையின் விதிகளுக்கு எதிரானது என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

பதறிய பாஜக
"முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகத்தில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இது தொடர்பாக ராணுவ தளபதி நரவனே எழுதிய சுயசரிதை புத்தகத்தை வெளியிட விடாமல் அரசு தடுக்கிறது" என்று ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எதிராக பேச முற்பட்டப்போது, அவரது மைக் அணைக்கப்பட்டிருக்கிறது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்.
"அதில் அப்படி என்ன இருக்கிறது, அந்தப் புத்தகம் ஏன் இவர்களை இவ்வளவு பயமுறுத்துகிறது? அவர்களுக்குப் பயம் இல்லையென்றால், நான் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்பட வேண்டும். நான் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் "100% உண்மையானவை" என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

அந்த ஒரு வரி.!
நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு வரிக்குதான் பிரதமர் மோடியும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பயப்படுகிறார்கள். அந்த வரியை நான் நாடாளுமன்றத்திற்குள் சொல்லுவேன், அதை யாரும் தடுக்க முடியாது…”என்று கூறியிருக்கிறார்.
சு.வெ பதிவு
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி நரவானே எழுதிய “விதியின் நான்கு நட்சத்திரங்கள்” (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.

ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது. உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு" என்று குறிப்பிட்டிருக்கிறார்.















