திருப்பரங்குன்றம் விவகாரம்: நிபந்தனை இன்றி மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்...
State Awards: மாற்றி வழங்கப்பட்ட கதாசிரியர் விருது... மிஸ்ஸான ரச்சிதா! - வரிசை கட்டும் சர்ச்சைகள்!
சின்னத்திரை கலைஞர்கள், சீரியல்களுக்கான விருதுகள் 2014 முதல் 2022ம் ஆண்டு வரைக்கும் சேர்த்து மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் விருதுகளை வழங்கவிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
இதற்கிடையில் இந்த விருதுகள் குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் ரவுண்டு கட்டத் தொடங்கியிருக்கின்றன.
''2011 முதல் 2021 வரை நடந்தது அதிமுக ஆட்சி. அப்ப இந்த விருதுகளை வருடா வருடம் தராம கிடப்புல போட்டது தவறுதான்.
ஆனா 21-ல் ஆட்சிக்கு வந்த இந்த ஆட்சியாளர்களாவது வந்த அடுத்த ஓரிரு வருஷத்துல கொடுத்திருக்கலாம். கமிட்டி அமைச்சா அந்தக் கமிட்டி விருதுக்கானவர்களைத் தேர்ந்தெடுக்கப் போறாங்க. மத்த வேற எந்த வேலையும் இல்லை. என்ன காரணமோ பதவிக்கு வந்ததுல இருந்து கொடுக்காம இப்ப தேர்தல் நெருங்குகிற சமயத்துல அறிவிக்கிறப்ப அவசர கோலத்துல அள்ளித் தெளிச்ச கதையாத்தான் இருக்கு.
அவசர அவசரமாப் பண்ணப் போய்த்தான் நிறைய விமர்சனங்களூம் எழுந்துள்ளன' என்கிறார் சீனியர் சின்னத்திரை நடிகர் ஒருவர்.
பெரிய வம்பால்ல இருக்கு!
'விருதுக்கான கமிட்டி வேண்டியவர்களுக்கு விருது தந்திருக்கு' என கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்த சீனியர் வில்லி நடிகை ஊர்வம்பு லட்சுமி, போகிற போக்கில், சின்னத்திரை நடிகர் சங்கம் மற்றும் தமிழக அரசுக்கும் கூட கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த விருதைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் தான் விண்ணப்பிக்க வேண்டுமென்கிறார்கள் சின்னத்திரை நடிகர் சங்கம் தரப்பில்.
'இந்த வருடம் ஒளிபரப்பான எங்களது இந்த சீரியலில் இவர்களுக்கெல்லாம் விருதுக்கு பரிந்துரை செய்கிறோம்' என அவர்கள் விண்ணப்பம் செய்ய, அதை வைத்தே அரசு பரிசீலனை செய்யுமாம்.
இந்த இடத்தில் தயாரிப்பாளருடன் நல்ல தொடர்பிலிருக்கும் நடிகர், நடிகைகள் மட்டுமே விருதுக்குத் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதையும் சுட்டிக் காட்டியாக வேண்டியுள்ளது.

நான் அவர் இல்லை!
சரி, இந்த ஆண்டுக்கான விருதுகளில் சொதப்பல்கள், குழப்பங்கள் என அரங்கேறியிருக்கும் சில சம்பவங்களைப் பார்க்கலாமா?
செம்பருத்தி' சீரியல் சிறந்த சீரியலுக்கான விருதைப் பெற்றுள்ளது.. அந்த சீரியல் இந்திய தொலைக்காட்சி வரலாற்றில், ஜீ தமிழ் சீரியல் ஒன்று டி.ஆர்.பி-யில் சன் டிவியை முந்திய சாதனையை நிகழ்த்தியது. அந்த சாதனைக்குப் பிறகு அந்த சீரியலில் கதாசிரியராக இருந்த ரவி அசோகனை சன் டிவி அழைத்துக் கொண்டது.
இப்படியொரு பெரிய சாதனையை நிகழ்த்திய சீரியலில் ஹீரோ கார்த்திக், ஹீரோயின் சபானா, அறிமுக நடிகர் கதிர் ஆகியோருக்கு மட்டும் விருது கிடைக்க, முக்கிய கதாபாத்திரமான ப்ரியா ராமனுக்கு விருது இல்லை. அதேபோல் இயக்குனருக்கும் இல்லை. இதற்காவது ஏதாவது காரணம் சொல்லலாம்.
ஆனால் இந்த சீரியலின் கதாசிரியர் என அப்போது ஜீ தமிழ் சேனலில் நிர்வாகப் பொறுப்பிலிருந்த தமிழ் தாசனுக்கு விருது அறிவித்திருப்பது ஏனோ?.

அவருக்குப் பதில் இவர்!
'பூவே பூச்சூடவா' என்கிற சீரியலுக்கும் சிறந்த தொடருக்கான விருது மற்றும் தொடரை இயக்கியதாக ரத்னம் வாசுதேவனுக்கு சிறந்த இயக்குனர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூவே பூச்சூடவே தொடர் 1149 எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் முதல் எழுநூறு எபிசோடு வரை இயக்கியது மணிகண்டன். இவருக்கும் சேர்த்து விருது அறிவிக்காமல், கடைசி 400 எபிசோடை இயக்கியவருக்கு மட்டும் விருதை அறிவித்திருக்கிறார்கள்.
சிறந்த இயக்குனர் விருது வாங்கிய மற்ற இயக்குனர்கள் எல்லாரும் சீரியலை முழுதாக இயக்கியிருக்க, ரத்னம் வாசுதேவன் விஷயத்தில் மட்டும் ஏன் இந்த குழப்பம் தெரியவில்லை.
'மீனாட்சி'க்கு என்னாச்சு?
சிறந்த கதாநாயகிகளூக்கான விருதுக்கு நடிகைகள் வாணி போஜன், நடிகைகள் ரேவதி, சங்கவி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சினிமாவில் கதாநாயகியாக நடித்த ரேவதிக்கு சீரியலில் சிறந்த நடிகையா எனக் கேட்கலாம். ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பான 'அழகு' தொடரில் அவர் நடித்தார் என்பதால், அதை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் ஜெயா டிவியில் ஒளிபரப்பான தொடரில் நடித்த சங்கவிக்கு விருது கிடைத்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சங்கவி நடித்த அந்த தொடரை இயக்கியது விருதுக்கான தேர்வுக் கமிட்டியிலிருக்கும் ஒரு இயக்குனர் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

அதேநேரம் 2014 முதல் 2022 வரையிலான இந்தக் காலக்கட்டத்தில் தமிழ் சீரியல் ஏரியாவில் பெரிய வரவேற்பு பெற்ற ஒரு தொடர் சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் நடித்த நடிகை ரச்சிதாவின் பெயர் விருதுப் பட்டியலில் இடம் பெறாமல் போனதும் பெரிய ஆச்சரியம். நெட்டிசன்கள் பலரும் இந்த கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
ஏனெனில் இந்தக் காலத்தில் சின்னத்திரையில் புகழின் உச்சத்திலிருந்தார் அவர். அவரது பெயர் அனுப்பப் பட்டு தேர்வுக் குழு கண்டு கொள்ளவில்லையா அல்லது தயாரிப்புத் தரப்பு அவரது பெயரை அனுப்பவில்லையா என்பது தெரியவில்லை.!


















