`விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு தவெக ஒரு சான்று' - விஜய் மீது எடப்...
போலீஸ் புகாருக்குப் பிறகும் தொடர்ந்த ஆபாச மெசேஜ்கள்; தொந்தரவு செய்தவரை தேடிப் பிடித்த சீரியல் நடிகை!
அழகு, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை அஸ்வினி. சில குறும்படங்களும் இயக்கியிருக்கிறார். இவர் தனக்கு இன்ஸ்டாகிராமில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை, நேரில் சென்று கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், 'கல்யாணமாகி குழந்தை இருக்குங்க எனக்கு. சில தினங்களுக்கு முன் முதன்முதலா மணிகண்டன்ங்கிற அந்த நபர் ரொம்ப ஆபாசமா சொல்லவே கூச்சப்படுகிற வார்த்தைகள்ல மெசேஜ் பண்ணினார். முதல்ல கடந்து போக நினைச்சேன். ஆனா தொடர்ந்து தொல்லையை நிறுத்தாததால், சைபர் க்ரைம்ல ஆன்லைன்லயே புகார் தந்தேன்.
புகார் தந்த விபரத்தையும் அந்த ஆளுக்கு அனுப்பி வச்சேன்.

அதுக்குப் பிறகும் தொந்தரவு நின்னபாடில்லை. 'போலீஸ்க்கு ஆயிரம் வேலை இருக்கு, உன் புகாரை எடுத்துகிட்டுதான் வரப் போறாங்களா'ன்னு மறுபடியும் மெசேஜ்.
அவனுடைய இந்த பதிலையும் என் புகாரையும் என் இன்ஸ்டாவுல போட்ட பிறகு பல பெண்கள்கிட்ட இருந்து எனக்கு மெசேஜ். அவங்ககிட்டயும் இதேமாதிரி பேசியிருக்காப்ல.
அதுல சிலர் 'இந்த் ஆளாள எங்க குடும்பத்துல பிரச்னை'ங்கிற அளவுக்கு குமுறியிருந்தாங்க.
அதனால 'இந்த ஆளை விடக் கூடாது'ன்னு முடிவு செஞ்சேன். சென்னையில இருக்கிற ஒரு ஹோட்டல்ல வேலை பார்க்கிறார்னு கிடைச்ச தகவலை வச்சு அந்த ஹோட்டலின் சில கிளைகளுக்குப் போனோம்.
கடைசியா ஒரு கிளையில், 'நடவடிக்கை சரியில்லைனு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே வேலையில இருந்து தூக்கிட்டோம்'னு சொன்னாங்க.
முந்தா நாள் தற்செயலா நானும் கணவரும் தியாகராய நகர் பக்கம் போயிட்டிருந்தப்ப சின்னதா ஒரு பரோட்டா கடையில அந்த ஆளைப் பாத்துட்டோம்.
தற்செயலாதான் பார்த்தோம். ஆனா கையும் களவுமா பிடிபட்டதால தப்பிக்கப் பார்த்தாப்ல. உடனே 100 க்கு போன் செஞ்சு, போலீஸும் வந்திடுச்சு.
எனக்கு மட்டுமல்ல, என்னை மாதிரி நிறையப் பேருக்கு அதுவும் திருமணமான பெண்களாப் பார்த்து இந்த மாதிரி தொல்லை தர்றவங்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கணும்னுதான் நானும் நாலு நாளா வேலையை எல்லாம் விட்டுட்டு மன உளைச்சலுடன் திரிஞ்சேன் . அதுக்கு பலன் கிடைச்சிடுச்சு" என்றார்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட கடையில் அந்த இளைஞரை பிடித்த போது அஸ்வினியும் அவரின் கணவரும் தாக்கியதாக கடையின் உரிமையாளர் ஒரு புகாரைத் தரப் போவதாக தெரிவித்த போலீசார், அது குறித்து அஸ்வினியிடம் விசாரித்தார்களாம்.
சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோ குறித்து அஸ்வினியிடம் கேட்டதற்கு,
``அவ்வளவு அநாகரிகமா ஆபாசமா பேசினவனைப் பார்த்தா அந்த நிமிஷம் யாரும் அடிக்கத்தான் செய்வாங்க. அதுக்குப் புகார் தந்தா போலீஸ் என்னை விசாரிக்கட்டும். போலீஸின் விசாரணைக்கு ஒத்துழைக்க நான் தயார். எனக்கு தரப்பட்ட தொல்லைகளுக்கு அவ்வளவு ஆதாரம் எங்கிட்ட இருக்கு.. அதைப் பார்த்தாலே போலீஸுக்கு உண்மை புரிஞ்சிடும்" என்கிறார்.
கடைசியாக கிடைத்த தகவல் படி சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.



















