சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வ...
இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்; மகிழ்ச்சியில் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் - என்ன காரணம்?
இந்தியா - இங்கிலாந்து பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15 -ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை, கரூரிலிருந்து வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி மேற்கொள்ளும் போது ஜவுளி வீட்டு உபயோகப் பொருட்களுக்கு எட்டு சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் வரை இறக்குமதி சுங்கவரி விதிக்கப்பட்டு வந்தது. இந்தக் கூடுதல் சுங்கவரியால் கரூர் ஏற்றுமதியாளர்களின் மற்ற நாடுகளுடனான போட்டித் திறனை பாதித்ததோடு, இந்திய பொருட்களின் இறுதி விலையும் அதிகரித்தது, இதனால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் மற்ற நாடுகளுக்கு இணையாக விலை அதிகமாக இருப்பதால் ஆர்டர்கள் குறைவாக இருந்து வந்தது.

இந்நிலையில்தான், இந்தியா இங்கிலாந்து சுகந்திர வர்த்தக ஒப்பந்தம் (INDIA UK FTA) கரூர் வீட்டு உபயோக ஜவுளி தொழிலுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் இந்திய அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சி கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இந்திய அரசின் வாணிபம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கோவை அயல்நாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் அலுவலகம் இணைந்து நடத்திய இந்தியா- இங்கிலாந்து ஏற்றுமதி தொடக்க விழா நிகழ்ச்சி, கரூரில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கோவை வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் ஸ்ரீதர், கரூரிலிருந்து சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் இங்கிலாந்துக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கொடியசைத்து முதல் சுதந்திர வர்த்தக ஏற்றுமதியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன், கரூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ் மற்றும் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கௌரவத் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் ஸ்ரீதர்,
"இங்கிலாந்து- இந்தியா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த வரிவிலக்கு ஒப்பந்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், இனிவரும் ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். கடந்த ஆண்டில் ரூ. 800 கோடி மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் கரூரிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
தற்போது, ஏற்பட்டுள்ள இந்தியா- இங்கிலாந்து சுங்க வரி விலக்கு காரணமாக, ரூ.1600 கோடி வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஆர்டர்கள் கிடைக்கும் என தொழில்துறை இடையே புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து உடனான தடையற்ற வர்த்தகத்தால் இந்திய ஏற்றுமதி இரு மடங்காக உயரும். மேலும், இந்தியா- இங்கிலாந்து இடையிலான உறவை வலுப்படுத்தும் இந்திய ஏற்றுமதி ஜவுளி பொருட்கள் 100 சதவிகிதம் தரமானவை என்பதால் அதிக அளவில் இந்தியாவில் இருந்து ஜவுளி உற்பத்தி பொருட்கள் இறக்குமதி செய்து கொள்ள இங்கிலாந்து அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.

இதனால், மற்ற ஜவுளி உற்பத்தி நாடுகளாக உள்ள போட்டியாளர்களான வங்கதேசம், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் ஜவுளி உற்பத்தி பொருட்களுக்கு வரிவிதிப்பு உள்ள நிலையில், இந்திய ஜவுளி பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு ஒரு புதிய மைல்கல்லாக இந்திய ஏற்றுமதியில் மேலும் உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிப்பதால் நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்" என்றார் .



















